மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிருத்விராஜ். அவர் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகிய திரைப்படம் தான் ஆடுஜீவிதம். இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த நஜீப் என்பவர் சவுதி அரேபியாவிற்கு வேலைக்காக சென்றபோது அங்கு பாலைவனத்தில் ஒரு கும்பலிடம் சிக்கி சுமார் 3 ஆண்டுகள் சித்திரவதையை அனுபவித்து அதில் இருந்து மீண்டு வந்த கதையை தான் படமாக்கி இருக்கின்றனர்.
ஆடுஜீவிதம் படத்தின் ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணி கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கியது. சுமார் 10 ஆண்டுகள் நடைபெற்ற அப்பணி கடந்த 2018-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதையடுத்து அப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் 6 ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின்னர் படப்பிடிப்பை நடத்தி முடித்த படக்குழு, அப்படத்தை வெற்றிகரமாக நேற்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்து உள்ளனர்.
இந்த நிலையில், ஆடு ஜீவிதம் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் ரூ.7.45 கோடி வசூலித்து உள்ளது. இதில் கேரளாவில் அதிகபட்சமாக ரூ.6.5 கோடியும், கர்நாடகாவில் ரூ.40 லட்சமும், தமிழ்நாட்டில் ரூ.50 லட்சமும், தெலங்கானாவில் ரூ.40 லட்சமும், இந்தியில் 10 லட்சமும் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. உலகளவில் இப்படம் முதல் நாளில் ரூ.16 கோடிக்கு மேல் வசூலித்திருக்கும் என சொல்லப்படுகிறது.