மதுரையில் அதிர்ச்சி சம்பவம்.. சிக்கன் குழம்பு சாப்பிட்ட தந்தை, மகள் பலி? நடந்தது என்ன?

First Published Oct 18, 2023, 10:53 AM IST

ஆசை ஆசையாய் சிக்கன் குழம்பு சாப்பிட்ட தந்தை மற்றும் 4 வயது மகள் உயிரிழந்த சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் கவுதம் ஆனந்த்(33). இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு 4 வயதில் மிதுஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், தந்தையும், மகளும் வீட்டில் சமைத்த சிக்கன் குழம்பை சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் 4 வயது குழந்தை திடீரென மயக்கம் அடைந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பதறியடித்துக்கொண்டு குழந்தையை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

அங்கு குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே கவுதமிற்கும் மருத்துவமனை வளாகத்திற்குள் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து அவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிறுமி  மிதுஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அறிந்த தந்தை கவுதம் ஆனந்துக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து  கெட்டுப்போன கோழிக்கறி சமைத்து சாப்பிட்டதால் இருவரும் உயிரிழந்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்த பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே தெரியவரும். சிக்கன் குழம்பு சாப்பிட்ட தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!