
நடிகர் சூர்யா, அகரம் என்கிற அறக்கட்டளையை கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கினார். இந்த அறக்கட்டளை மூலம் ஏராளமான ஏழை, எளிய மாணவ, மாணவிகள் கல்வி பயின்று இன்று டாக்டர்களாகவும், இன்ஜினியர்களாகவும் கோலோச்சி இருக்கிறார்கள். அகரம் அறக்கட்டளை மூலம் 6378 மாணவர்கள் கல்வி பெற்று இருப்பதாகவும், அதில் 4800 பேர் முதல் தலைமுறை மாணவர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அகரம் அறக்கட்டளையில் விதை என்கிற திட்டம் தொடங்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிறது. அதை கொண்டாடும் விதமாக சென்னையில் நேற்று பிரம்மாண்ட விழா நடைபெற்றது.
அகரம் அறக்கட்டளை நடத்திய இந்த விழாவில், அதில் பயின்று டாக்டரான 51 பேர் கலந்துகொண்டனர். இந்தியாவிலேயே அதிக டாக்டர்களை உருவாக்கிய ஒரே ஒரு அரசு சாரா அமைப்பு என்கிற சாதனையை அகரம் அறக்கட்டளை படைத்துள்ளது. இந்த விழா முழுக்க முழுக்க நடிகர் சூர்யாவையும் அவரது குடும்பத்தினரையும் முன்னிலைப்படுத்தி இருந்தது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. ஏனெனில் அகரம் பவுண்டேஷன் சூர்யாவால் மட்டும் நடத்தப்படவில்லை. அது வெற்றிகரமாக நடைபெற பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களும் அதன் பின்னணியில் இருக்கின்றன.
இந்த நிலையில் சூர்யாவின் அகரம் பவுண்டேஷனில் மோசடி நடந்ததாக குறிப்பிட்டு ஒருவர் வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஜெய் பீம் படம் ரிலீஸ் ஆன சமயத்தில் நடிகர் சூர்யா, இருளர் பழங்குடியினரின் படிப்புக்காக ஒரு கோடி ரூபாய் கொடுத்திருந்தார். அதில் நடந்த மோசடியை பற்றி தான் அந்த வீடியோவில் விவரித்துள்ளனர். அந்த செக்கில் அகரம் பவுண்டேஷனில் இருந்து பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளைக்கு வழங்கியதாக குறிப்பிட்டு இருந்தனர். ஆனால் அப்படி ஒரு அமைப்பு இல்லவே இல்லை. அப்போ அந்த பணம் யாருக்கு சென்றது? என கேள்வி எழுப்பியுள்ள அவர், முதல்வர் முன்னிலையிலேயே இப்படி ஒரு மோசடி நடந்திருப்பதாக அந்த நபர் வீடியோவில் கூறி இருக்கிறார்.
நேற்று நடைபெற்ற அகரம் அறக்கட்டளை விழாவில் சூர்யாவை மட்டுமே முன்னிலைப்படுத்தியும், அவரைப் பாராட்டியும் பல்வேறு பதிவுகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்த நிலையில், அகரம் பவுண்டேஷன் மோசடி குறித்து பேசப்பட்ட பழைய வீடியோவும் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த சிலர் அகரம் பவுண்டேஷனில் இப்படி ஒரு மோசடி நடந்ததா என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் ரசிகர்களோ... இது வேண்டுமென்றே சூர்யாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக ஹேட்டர்ஸால் பரப்பப்படும் வீடியோ என பதிலடி கொடுத்து வருகின்றனர்.