இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஷக்தி செளந்தர் ராஜன். இவர் கடந்த 2010-ம் ஆண்டு பிரசன்னா நடிப்பில் வெளியான நாணயம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து சிபிராஜ் நடித்த நாய்கள் ஜாக்கிரதை படத்தை இயக்கிய அவர், அப்படத்தில் நாய்க்கும் மனிதனுக்கும் இடையேயான அன்பை நேர்த்தியாக வெளிப்படுத்தி வெற்றி கண்டார்.
இதையடுத்து ஜெயம் ரவியை வைத்து மிருதன் என்கிற ஜாம்பி படத்தை இயக்கினார். அதுவரை ஹாலிவுட்டில் மட்டுமே ஜாம்பி படங்களை பார்த்து வந்த ரசிகர்களுக்கு இது ஒரு புது அனுபவமாக இருந்தது. தமிழில் வெளியான முதல் ஜாம்பி படம் இதுவாகும். இதையடுத்து டிக் டிக் டிக் படத்தை இயக்குனார் ஷக்தி. விண்வெளியை மையமாக வைத்து அவர் இப்படத்தை இயக்கி இருந்தார்.
இவ்வாறு தொடர்ந்து ஹாலிவுட் தரத்திலான படங்களை தமிழில் கொடுத்து வரும் இயக்குனர் ஷக்தி செளந்தர் ராஜன், தற்போது அதே பாணியில் இயக்கியுள்ள படம் தான் கேப்டன். ஹாலிவுட்டின் பிரிடேட்டர் பட பாணியில் ஏலியன்களை வைத்து ஒரு வித்தியாசமான படமாக இதனை உருவாக்கி உள்ளார் ஷக்தி. இதில் நடிகர் ஆர்யா ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார்.