
சிம்ம ராசிக்கு ஐந்தாம் மற்றும் எட்டாம் வீட்டின் அதிபதியாக விளங்கி வரும் குரு பகவான், குரு பெயர்ச்சிக்குப் பின்னர் 12ஆம் வீடான அயன, சயன, விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். மேலும் தனது ஐந்தாம் பார்வையால் நான்காம் இடமான சுக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் ஆறாம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையால் அஷ்டம ஸ்தானத்தையும் பார்க்கிறார். மேலும் 05-12-2026 வரை சிம்ம ராசியில் கேதுவும், ஏழாம் இடத்தில் ராகுவும் சஞ்சரிப்பார்கள். கோச்சார கிரகங்களின் நிலை சற்று சுமாராகவே உள்ளது. எனவே சிம்ம ராசிக்காரர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
பொதுவாக விரய ஸ்தானத்தில் சுப கிரகங்கள் சஞ்சரிப்பது என்பது சிறப்பான அம்சமாகும். குரு பகவான் விரய ஸ்தானத்திற்கு சென்றாலும் தனது விசேஷ பார்வையின் மூலம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நற்பலனை வழங்குவார் என்பதால் அதிக கவலைப்படத் தேவையில்லை. மேலும் சிம்ம ராசிக்காரர்கள் இயல்பிலேயே அதிக மன வலிமை படைத்தவர்கள். இவர்கள் எத்தகை இடையூறுகள் வந்தாலும் தன்னம்பிக்கையால் அடைய வேண்டிய இலக்கை அடைவார்கள்.
நீண்ட நாள் கனவுகள், லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு குரு பகவான் உங்களுக்கு வழி காட்டுவார். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடம்பரச் செலவுகள் அதிகமாகும். எனவே ஆடம்பரத்தையும், அவசியத்தையும் உணர்ந்து செயல்பட்டால் குரு பெயர்ச்சி பெரிய இழப்புகளைத் தராது. குருவின் பார்வை படக்கூடிய இடங்கள் சுப இடங்களாக இருப்பதால் நல்ல முன்னேற்றத்தையும் காணமுடியும்.
குரு பெயர்ச்சியை விட குருவின் பார்வை அதிக பலன்களை தரும் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. குருவின் ஐந்தாம் பார்வை நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் விழுகிறது. இதன் காரணமாக நீங்கள் வாழ்க்கையில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பு கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கலாம். பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் கடினமாக உழைத்து வெற்றியைப் பெறுவீர்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடந்த கால கடன்களில் இருந்து மீண்டு வருவீர்கள். உற்றார், உறவினர்களை அனுசரித்துச் செல்வீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். பழைய வீடு மாற்றம் அல்லது பராமரிப்பு பணிகளை மேற்கொள்வீர்கள். மாணவர்கள் கல்வியில் உயர்ந்த நிலையை அடைவார்கள். உடல் ஆரோக்கியமும் இந்த காலகட்டத்தில் சீராக இருக்கும்.
குரு பகவானின் ஏழாம் பார்வை ஆறாம் வீடான ருண, சத்ரு, ரோக ஸ்தானத்தின் மேல் விழுகிறது. இதன் காரணமாக உங்கள் வார்த்தைகளால் ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு கூட பகை உருவாகும் சூழல் ஏற்படும். பிறர் மனதை நோகடிக்கும் பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். கடன் பெற்று அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்க வேண்டும் என்கிற ஆர்வம் அதிகரிக்கும். இருப்பினும் சில பகைவர்கள் கூட இந்த காலகட்டத்தில் நண்பர்கள் ஆவார்கள். எதிரிகள் அடிபணிந்து செல்வார்கள். பலரும் பகையை மறந்து நட்பு பாராட்டுவார்கள். பழைய கடன்களை அடைக்க புதிய வழிகள் பிறக்கும். பார்த்துக் கொண்டிருக்கும் வேலையையும், நடத்திக் கொண்டிருக்கும் தொழிலையும் மாற்றக்கூடாது. உடல் ஆரோக்கியத்தில் சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், குருபெயர்ச்சி உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.
குருவின் ஒன்பதாம் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் உள்ள சனி பகவானின் மேல் விழுகிறது. குரு-சனி சம்பந்தம் தர்ம கர்மாதிபதி யோகத்தை உருவாக்கும். சுமார் 8 மாத காலத்திற்கு ஏற்படும் இந்த யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனியால் ஏற்படக்கூடிய தாக்கம் குறையும். தொழிலில் மன உளைச்சல் சீராகும். உத்தியோகத்தில் மாற்றங்கள் எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். “பதறாத காரியம் சிதறாது” என்ற பழமொழிக்கு ஏற்ப பதறாமல் செய்யும் காரியங்கள் நல்ல முடிவுகளைத் தரும். அஷ்டம சனியின் காலம் என்பதால் இந்த காலத்தில் நடக்கும் திருமணங்கள் பிரிவினையை ஏற்படுத்தலாம். எனவே திருமண முடிவுகளை தவிர்ப்பது நல்லது. சனிபெயர்ச்சி வரை திருமணம் சார்ந்த விஷயங்களில் பொறுமையை கையாள வேண்டியது அவசியம்.
02-06-2026 முதல் 18-06-2026 வரை குரு பகவான் தனது சொந்த நட்சத்திரமான புனர்பூசத்தில் சஞ்சரிப்பார். இதன் காரணமாக சிலருக்கு சொத்துக்கள் வாங்கும் யோகம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வேலையில்லாமல் இருந்து வரும் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களால் தங்கம், வெள்ளி, பணம் ஆகியவை கிடைக்கலாம். சிலர் உத்தியோகத்திற்காக இடமாற்றம் மேற்கொள்ளலாம். காதல் விவகாரங்களில் வம்பு வழக்குகளை சந்திக்க நேரிடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தைப் பேறு உண்டாகும்.
19-06-2026 முதல் 19-08-2026 வரை சனி பகவானின் பூச நட்சத்திரத்தில் குரு பகவான் அமர இருக்கிறார். இந்த காலகட்டத்தில் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய மாற்றம் உண்டாகும். உங்கள் தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ற வேலை கிடைக்கும். கூட்டுத்தொழிலில் சிலர் உங்களுக்கு துரோகம் இழைக்கலாம். சிறு சிறு சறுக்கல்கள் இருந்தாலும் கூட்டு வியாபாரத்தை சமாளித்து வெற்றிகளைப் பெறுவீர்கள். வீடு கட்டும் விருப்பங்கள் நிறைவேறும். அடமானத்தில் இருக்கும் சொத்துக்கள் நகைகளை மீட்பதற்கான வழிகள் பிறக்கும். கை, கால், மூட்டு வலி சார்ந்த உடல் உபாதைகள் ஏற்படலாம்.
20-08-2026 முதல் 31-10-2026 வரையும், 15-04-2027 முதல் 26-06-2027 வரையும் புதன் பகவானுக்குச் சொந்த ஆயில்ய நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் உயர்ந்த நிலையை எட்டும் அளவிற்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும். உங்கள் எண்ணங்களும் விருப்பங்களும் நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும். சொத்துக்கள், தங்கம் போன்றவற்றில் முதலீடுகள் செய்வீர்கள். திட்டமிட்ட சுப காரியங்கள் திட்டமிட்டபடியே நடக்கும். குடும்ப உறவுகளுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் மறையும். சில பாதகங்கள் இருந்தாலும் குடும்பத்தில் நடக்கும் சம்பவங்கள் உங்களை மகிழ்விக்கும்.
26-01-2027 முதல் 13-04-2027 வரை ஆயில்ய நட்சத்திரத்தில் குரு பகவான் வக்ர கதியில் அதாவது பின்னோக்கி நிலையில் பயணிக்கிறார். அப்போது அவர் கேதுடன் இணைவதால் சில சங்கடங்கள் ஏற்படலாம். சூழ்நிலை கைதியாக உணர்வீர்கள். பல இடங்களில் பேச முடியாத நிலை உருவாகும். கொடுக்கல், வாங்கலில் சில அசௌகரியங்கள் ஏற்படலாம்.
01-11-2026 முதல் 13-12-2026 வரை குரு பகவான் அதிசாரமாக சிம்ம ராசிக்கு சென்று நேர் கதியில் சஞ்சரிப்பார். அப்போது அவர் கேதுவுடன் இணைவதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு சில சமயங்களில் பலன்கள் கிடைக்கும், சில சமயங்களில் பலன்கள் கிடைக்காமல் போகலாம். அஷ்டம சனி காலம் என்பதால் சுப விரயங்கள் நடைபெறும். 14-12-2026 முதல் 25-01-2027 வரை சிம்ம ராசியில் குரு பகவான் பின்னோக்கி சஞ்சரிப்பார். அப்போது முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழலில் அனுபவஸ்தர்களின் ஆலோசனையைக் கேட்டு முடிவுகளை எடுப்பது நல்லது. தேவையில்லாத நட்புகளைத் தவிர்க்கவும். குழப்பமான மனநிலையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படலாம்.
தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. ஞாயிற்றுக்கிழமைகளில் சிவாலயங்களில் 11 முறை வலம் வந்து வழிபடுவது நன்மை தரும். பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வர பகவானை வணங்குவது வாழ்க்கையில் முன்னேற்றத்தை அளிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)