
மிதுன ராசிக்கு குரு பகவான் ஏழு மற்றும் பத்தாம் வீடுகளின் அதிபதியாக விளங்கி வருகிறார். இதுவரை ஜென்ம குருவாக பலன் கொடுத்துக் கொண்டிருந்த அவர், குரு பெயர்ச்சிக்கு பின்னர் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு செல்ல இருக்கிறார். இது மிதுன ராசிக்காரர்களுக்கு பொற்காலம் என்று சொல்லக்கூடிய வகையில் அமைய இருக்கிறது.
தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானின் ஐந்தாம் பார்வை ஆறாம் வீடான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திலும், ஏழாம் பார்வை எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்திலும், ஒன்பதாம் பார்வை பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்திலும் விழ இருக்கிறது. மேலும் இந்த காலகட்டத்தில் குரு பகவான் அதிசாரமாக சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகி 43 நாட்கள் நேர் கதியிலும், அதே ராசியில் 42 நாட்கள் வக்ர நிலையிலும் பயணிக்கிறார். இதனால் மிதுன ராசிக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
குரு பகவான் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலம் அனைத்து யோகத்தையும் தரக்கூடிய காலமாக அமையும். உங்களுடைய வாக்கில் முப்பெரும் தேவியர்களான அம்பிகை, சரஸ்வதி, லட்சுமி ஆகியோர் குடியேறுவார்கள். அசுப கிரகங்களின் சஞ்சாரத்தால் ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நிவர்த்தியாகும் நேரம் நெருங்கியுள்ளது. உங்களுடைய வாக்கு தோஷம் அகன்று வாக்கு வன்மை பெருகும். குடும்பத்தில் இருந்த மன சஞ்சலங்கள் அகலும்.
இதுவரை வறுமையில் வாடியவர்கள் இனி கோபுரத்திற்கு செல்ல இருக்கிறீர்கள். பொருளாதாரத்தில் எதிர்பாராத மேன்மை உண்டாகும். நிலையற்ற வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு நிலையான வாழ்க்கை கிடைக்க உள்ளது. மகிழ்ச்சியும், சந்தோஷமும் அதிகரிக்கும். உங்கள் திறமைகளை வெளிக்காட்டி வெற்றிகளைப் பெறுவீர்கள். பேச்சை மூலதனமாக கொண்டவர்களுக்கு வாழ்வாதாரம் அதிகரிக்கும். ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடிய நிலை இனி அடியோடு மாறும்.
தன ஸ்தானத்தில் குருபகவான் சஞ்சரிப்பது மற்றும் அவரின் ஐந்தாம் பார்வை எதிரிகள் ஸ்தானத்தில் விழுவது என்பது மிகுந்த சுபமானதாக கருதப்படுகிறது. ஆறாம் இடம் என்பது கடன், நோயை மட்டும் கூறக்கூடிய இடம் கிடையாது. அது ஒருவரின் உத்தியோகத்தை தீர்மானிக்கக்கூடிய இடமாகும். எனவே இந்த இடத்தில் குருவின் பார்வை விழுவதால் நிரந்தர வேலை கிடைக்கும். அரசு வேலைக்கான வாய்ப்புகளும் உண்டு. அவமானங்கள், மனக்கசப்புகள் மறையும். உங்கள் எதிரிகளை ஓட ஓட விரட்டி அடிப்பீர்கள். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. வைத்தியங்கள் பலன் தரும். சிறு உடல் உபாதைகள் இருப்பினும் அவை மறையும். எதிரிகள், போட்டியாளர்கள் விலகுவதால் வெற்றி உங்களைத் தேடி வரும். உங்கள் புகழும், பெயரும் அதிகரிக்கும்.
குருவின் ஏழாம் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் விழுகிறது. மேலும் விபரீத ராஜயோகமும் உருவாவதால் திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழிநடத்தும். பங்குச்சந்தை மற்றும் வணிகம் மூலம் வருமானம் உயரும். சிலருக்கு இன்சூரன்ஸ், பாலிசி போன்றவற்றின் மூலம் பலன்கள் கிடைக்கலாம். எட்டாம் இடம் என்பது எதிர்கால தேவைக்கு முதலீடு செய்யும் இடம் என்பதால் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு நல்ல முதலீடுகளை ஏற்படுத்துவீர்கள். வைப்புத் தொகை அல்லது மனை, நிலம் போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள். அசையும், அசையா சொத்துக்கள் வாங்குவீர்கள். திருமணம், குழந்தை பாக்கியம் சொத்து சேர்க்கை ஆகியவற்றில் ஏற்பட்ட தடைகள் அனைத்தும் முடியை இருக்கிறது. அறுவை சிகிச்சை மூலம் சிலர் ஆரோக்கியத்தில் மேன்மை அடைவீர்கள். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட தடைகள் மற்றும் தாமதங்கள் விலகும்.
குருவின் ஒன்பதாம் பார்வை பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் விழுவதால், தொழிலில் கடந்த காலத்தில் நடந்த கசப்பான சம்பவங்கள் மாறும் சரியாக திட்டமிட்டு, சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றிகளைப் பெறுவீர்கள். தைரியமும், துணிச்சலும் அதிகரித்து புதிய ஆற்றலும், உத்வேகமும் பிறக்கும். உடல் சுகமும், சந்தோஷமும் அதிகரிக்கும். தொழில் ஸ்தானத்தில் நிற்கும் சனி பகவானை குரு பகவான் ஒன்பதாவது பார்வையில் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். எனவே இந்த நேரத்தில் உங்கள் தொழில் மற்றும் குடும்பத் தொழில் அனைத்தும் லாபத்தைப் பெறும். லாபங்கள் முதலீடுகளாக மாறும். இரவு, பகல் பார்க்காமல் கடுமையாக உழைத்து ஆதாயங்களைப் பெறுவீர்கள். சில்லறை வியாபாரிகள் மொத்த விற்பனையாளர்களாக மாறக்கூடிய அமைப்பு உருவாகும்.
02-06-2026 முதல் 18-06-2026 வரை குரு பகவான் புனர்பூச நட்சத்திரத்தில் பயணிக்க இருக்கிறார். இது குருவின் சொந்த ராசி என்பதால் மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் சுப பலன்களை வாரி வழங்கும். குறிப்பாக குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். திருமணத்திலிருந்து தடைகள் அகலும். தெளிவான பேச்சு, தைரியமான செயல், குணமான நடவடிக்கைகள் மூலம் சமுதாயத்தில் உங்களை புதிய நபராக அடையாளம் காட்டுவீர்கள். முடங்கிக் கிடந்த உங்கள் திறமைகள் வெளிப்பட்டு வெற்றிகள் கிடைக்கும். உங்களுக்கு மன வேதனையை ஏற்படுத்திய மருமகள்கள் அல்லது சம்மந்திகள் உங்களை புரிந்து கொண்டு இணைவார்கள். இதனால் குடும்பத்தில் சமூகமான சூழல் ஏற்படும்.
மிதுன ராசிக்கு 8 மற்றும் 9 ஆம் வீடுகளின் அதிபதியான சனி பகவானின் பூச நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்க இருக்கிறார். இந்த சஞ்சாரம் 19-06-2026 முதல் 19-08-2026 வரை நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இந்த காலகட்டத்தில் எதிர்பாராத உதவிகள் தேடி வரும். உங்களுடைய ஆன்ம பலம் பெருகும். மாமியார் மற்றும் கணவர் வழியில் முன்னேற்றம் ஏற்படும். அவர்கள் வழியில் உதவி கிடைக்கும். பெண்களுக்கு சுயமாக தொழில் தொடங்க வங்கிக் கடன்கள் அல்லது சுய உதவிக் குழுக்கள் மூலம் கடன்கள் கிடைக்கும். இதனால் புதிய தொழில் அல்லது கூட்டுத் தொழில்களை தொடங்குவீர்கள். உங்கள் இலக்குகளை எளிதில் அடையக் கூடியதற்கான மார்க்கங்கள் உருவாகும்.
20-08-2026 முதல் 31-10-2026 வரை குரு பகவான் புதன் பகவானுக்கு சொந்தமான ஆயில்ய நட்சத்திரத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக தாய் வழியில் சொத்துக்கள், நகைகள், பணங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. தாய் வழியில் இருந்த பூர்வீகச் சொத்துக்களின் நிலவிய பிரச்சனைகள் நிவர்த்தி ஆகும். விவசாயம் செய்பவர்கள், மீன் வளர்ப்பு, சுய தொழில் செய்பவர்கள், கால்நடை வளர்ப்பவர்கள், பண்ணையாளர்கள், ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களின் வாழ்வாதாரம் உயரும். தாய் வழி உறவுகளின் அன்பும், ஆசீர்வாதமும் கிடைக்கும். நிலுவையில் இருந்த கடன்கள் வசூலாகும்.
26-01-2027 முதல் 13-04-2027 வரை குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் வக்ர கதியில் பயணிக்க இருக்கிறார். இந்த காலகட்டத்தில் அவர் கேதுடன் இணைந்து பயணிப்பதால் எந்த செயலிலும் நிதானத்தோடு செயல்பட வேண்டும். வீண் விரயங்கள், ஆடம்பரச் செலவுகளை குறைக்க வேண்டும். முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பண பரிவர்த்தனைகளிடம் கவனத்துடன் இருக்கவும். யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது. பெண்கள் தங்களது புத்திசாலித்தனத்தால் குடும்ப விஷயங்களை கையாள வேண்டியது அவசியம்.
சிம்ம ராசிக்கு 01-11-2026 முதல் 13-12-2026 வரை அதிசாரமாக சென்று நேர் கதியில் சஞ்சரிக்கும் குருபகவான் சிம்ம ராசியில் ஏற்கனவே பயணித்து வரும் கேதுடன் இணைகிறார். இதன் காரணமாக மன சஞ்சலங்கள் அதிகரிக்கலாம். மன நிம்மதி கெடலாம். பிரச்சனைகள் ஏற்படலாம். 14-12-2026 முதல் 25-01-2027 வரை சிம்ம ராசியில் வக்ர கதியில் குரு பகவான் பயணிப்பார். இதன் காரணமாக வாழ்க்கையை பாதிக்கும் பெரிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். பெரிய தொகையை யாருக்கும் கடனாக கொடுப்பதோ வாங்குவதோ கூடாது. நேர்மையாக நியாயமாக உழைத்தால் எந்த கிரக பெயர்ச்சியாலும் பாதிப்பு ஏற்படாது.
திருவெண்காடு ஆலயத்திற்கு ஒருமுறை சென்று வழிபட்டு வருவது மிகவும் புண்ணியங்களைத் தரும். புதன்கிழமைகளில் விநாயகருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபடுவது நவகிரக தோஷத்தை குறைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)