
26-05-2026 அன்று குரு பகவான் ரிஷப ராசியின் தனம், வாக்கு மற்றும் குடும்ப ஸ்தானத்திலிருந்து மூன்றாம் வீடான தைரியம் மற்றும் வீர ஸ்தானத்திற்கு மாறுகிறார். மேலும் தனது ஐந்தாம் பார்வையால் ஏழாவது வீடான களத்திர ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தையும், ஒன்பதாவது பார்வையால் 11வது வீடான லாப ஸ்தானத்தையும் பார்க்கிறார். மேலும் குரு பகவான் அதிசாரமாக சிம்ம ராசிக்கு சென்று 43 நாட்கள் நேர்கதியில் பயணிக்க இருக்கிறார். 01-11-2026 முதல் 25-01-2027 வரை 42 நாட்கள் வக்ர கதியிலும் (பின்னோக்கிய நிலைநிலும்) சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக ரிஷப ராசிக்கு ஏற்படக்கூடிய பொதுவான பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
உச்ச குருவானவர் தைரிய ஸ்தானத்தில் அமர்வது என்பது சிறப்பான அமைப்பாகும். இதுவரை தன ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த அவர் மூன்றாம் வீடான தைரியம் மற்றும் சகாய ஸ்தானத்திற்கு செல்கிறார். இது ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிய வெற்றிகளை உருவாக்கித் தரக்கூடிய அமைப்பாகும். ரிஷப ராசியினர் எடுக்கும் அனைத்து புதிய முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். சாதகமான சந்தர்ப்பங்களை குரு பகவான் உருவாக்கித் தரப் போகிறார். புகழ், அந்தஸ்து, கௌரவம் இந்த காலகட்டத்தில் உயரப்போகிறது. பொருளாதார நிலை சாதகமாக மாறும்.
அனைத்து விதமான ஏற்ற தாழ்வுகளையும் சமாளிக்கும் மன வலிமை உண்டாகும். நீண்ட காலமாக தள்ளிப் போய்க் கொண்டிருந்த வியாபார முயற்சிகளை தைரியமாக தொடங்கி வெற்றிகளைக் காண்பீர்கள் சகோதரர்கள் வழியில் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி உறவுகள் மேம்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கு ஏற்ப சம்பள உயர்வு, பதவி உயர்வு அல்லது விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கும். மனதில் இருந்த தாழ்வு மனப்பான்மை நீங்கி, எதையும் எதிர்கொள்ளும் அசாத்திய தன்னம்பிக்கை பிறக்கும்.
குரு பகவானின் ஐந்தாம் பார்வை ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் விழுகிறது. இதன் காரணமாக ஜாதக ரீதியான தோஷங்கள், சாபங்கள் விலகி திருமணத் தடைகள் அகலும். காதல் திருமணத்திற்கு தடையாக இருந்த பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பார்கள். கருத்து வேறுபாடால் பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் சேர்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். திருமணமான தம்பதிகள், குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்வார்கள். விவாகரத்து வழக்குகள் தள்ளுபடி ஆகும். நண்பர்கள், கூட்டுத் தொழில் செய்து வருபவர்கள், வாடிக்கையாளர்கள், வாழ்க்கை துணை ஆகியவர்களால் சகாயமான காரியங்கள் நடக்கும்.
குரு பகவானின் ஏழாம் பார்வை ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தில் விழுகிறது. இதன் காரணமாக ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். பித்ரு தோஷம் உள்ளவர்களில் அதிலிருந்து விடுபடுவீர்கள். தந்தை வழி உறவுகளுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். தடைபட்ட திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் இல்லாத நிலை ஆகியவை முடிவுக்கு வரும். கடன் தொல்லைகள் சீராகும். முன்னேற்றத்தை நோக்கிய அடுத்த படியை எடுத்து வைப்பீர்கள். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக உணர்வீர்கள். உங்களை தவறாக புரிந்து கொண்டவர்கள் மீண்டும் உங்களை புரிந்து கொண்டு உங்களுடன் இணைவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
குரு பகவானின் ஒன்பதாம் பார்வை பதினோராம் வீடான லாப ஸ்தானத்தில் விழுகிறது. இது விருப்பங்களும், ஆசைகளும் நிறைவேற கூடிய காலம் உருவாவதை குறிக்கிறது. கோச்சார குருவின் பார்வை 11ஆம் வீட்டில் பதிவதால் உங்கள் வாழ்நாள் கனவுகள், எண்ணங்கள், லட்சியங்கள் நிறைவேறும் காலம் நெருங்கி உள்ளது. அனைத்து துறைகளிலும் வெற்றியைக் காண்பீர்கள். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் துலங்கும். சிறிய லாபம் பார்த்தவர்கள் இனிய பெரிய லாபத்தைப் பார்ப்பீர்கள். சிறு தொழில் செய்பவர்கள் தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். மூத்த சகோதரன் அல்லது தந்தை வழியில் சித்தப்பா, பெரியப்பாவிடமிருந்து பண ஆதாயங்கள் கிடைக்கலாம். மருமகளால் ஏற்பட்ட குடும்ப பிரச்சனைகள் தீரும். இந்த காலகட்டத்தில் அதிக பண வரவால் ஆடை, ஆபரணங்கள், பொன் பொருள், நிலம், மனை போன்றவற்றின் சேர்க்கை நடைபெறும். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு வரமாக மாறும்.
ரிஷப ராசிக்கு 8 மற்றும் 11ஆம் வீடுகளின் அதிபதியாக விளங்கிவரும் குரு பகவான் புனர்பூச நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலம் விபரீத ராஜயோகத்தை உருவாக்கும். இதன் காரணமாக திடீர் அதிர்ஷ்டம், அதிக பண வரவு, சொத்துக்கள் சேர்க்கை, உபரி வருமானம் போன்றவை கிடைக்கலாம். 02-06-2026 முதல் 18-06-2026 வரை இந்த 16 நாட்கள் பணவரவு அபரிமிதமாக இருக்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். அரசிடமிருந்து வீட்டு மனை அல்லது வீடு கட்ட தேவையான நிதி உதவிகள் கிடைக்கும். பணத்தட்டுப்பாடுகள் நீங்கி பொன், பொருள், சேர்க்கை அதிகரிக்கும்.
ரிஷப ராசியின் 9 மற்றும் 10 ஆம் வீடுகளின் அதிபதியாக விளங்கும் சனி பகவானின் பூச நட்சத்திரத்தில் குரு பகவான் 19-06-2026 முதல் 19-08-2026 வரை 60 நாட்கள் சஞ்சரிப்பார். இந்த காலகட்டம் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டகரமான பலன்களை அளிக்கும். உபரி வருமானத்திற்கான வழிகள் திறக்கும். குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலமாக வருமானம் கிடைக்கும். சொத்துக்களை பிரிப்பதில் நிலவிய சர்ச்சைகள் அகலும். பாகப்பிரிவினைகள் சமூகமாக முடிந்து உங்களுக்கு வரவேண்டிய பங்குகளும் பாக்கிகளும் வந்து சேரும். மனைவிக்கு அரசு உத்தியோகம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
20-08-2026 முதல் 31-10-2026 வரையும், 15-04-2027 முதல் 26-06-2027 வரையும் குரு பகவான் புதன் பகவானுக்கு சொந்தமான ஆயில்ய நட்சத்திரத்தில் பயணிப்பார். இந்த காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு உடலும், மனமும் புத்துணர்ச்சி அடையும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். பங்குச் சந்தைகளில் லாபம் உண்டாகும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் சீராகும். உயர் கல்வி படிக்க முடியாமல் இருந்த மாணவர்களுக்கு தடைகள் அகலும். பகைவர்களும் நண்பர்களாக மாறுவார்கள். தொழிலில் இருந்த சங்கடங்கள் சரியாகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வாழ்க்கையில் நிலவிய பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.
26-01-2027 முதல் 13-04-2027 வரை குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் வக்ர கதியில் (பின்னோக்கிய நிலையில்) சஞ்சரிப்பார். இந்த காலகட்டத்தில் குருவும் கேதுவும் இணைந்து மூன்றாம் வீட்டில் சஞ்சரிப்பதால் சில பிரச்சனைகள் உருவாகக்கூடும். முன் பின் தெரியாதவரிடம் பண பரிவர்த்தனையை தவிர்க்க வேண்டும். புதிய ஒப்பந்தங்கள் ஆவணங்களில் கையெழுத்திடும்போது ஒரு முறைக்கு இருமுறை படித்துப் பார்த்து முடிவெடுக்க. வேண்டும் அதீத தைரியம் காரணமாக அவசரப்பட்டு பேச நேரிடலாம் என்பதால் வார்த்தைகளில் கவனம் தேவை. சிறு சிறு உடல் உபாதைகள் வரக்கூடும். பிள்ளைகளை கூடுதலாக கண்காணிப்பது மிக அவசியம்.
01-11-2026 முதல் 13-12-2026 வரை குரு பகவான் சிம்ம ராசிக்கு அதிசாரமாக சென்று நேர் கதியில் பயணிப்பார். இந்த நாட்கள் அவர் கேதுவுடன் இணைகிறார். எனவே இந்த காலகட்டத்தில் தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். உங்கள் ஆவணங்கள், நகைகள், சொத்துக்களை பத்திரமாக வைக்க வேண்டும். வேலையில் திடீர் மாற்றங்கள் ஏற்படலாம். வேலை பறிபோகும் வாய்ப்புகளும் உள்ளது. முன்னோர்களின் பரம்பரை நோய் தாக்கம் அதிகரிக்கும்.
14-02-2026 முதல் 25-01-2027 வரை சிம்ம ராசியில் குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பார். இந்த காலகட்டத்தில் முக்கிய முயற்சிகளை தவிர்க்க வேண்டும். தங்கம் வாங்குவது, பழைய தங்கத்தை விற்பது ஆகியவற்றில் இழப்புகள் ஏற்படலாம். புதிய ஒப்பந்தத்தில் சிந்தித்து கையெழுத்திட வேண்டும். வீண் விரயங்களைத் தவிர்த்து பணத்தை சேமிப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அதிக கவனம் இருக்க வேண்டும். மாணவர்கள் அதிக கவனம் செலுத்தி படிக்க வேண்டும்.
அருகிலுள்ள அம்மன் கோயிலுக்கு மல்லிகை பூவால் கட்டிய மாலையை சாற்றி அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயாருக்கு தீபம் ஏற்றி வழிபடுவது வாழ்வில் பொருளாதாரம் முன்னேற்றத்தை அளிக்கும்.