
ஜோதிடத்தில் சுப கிரகமாக அறியப்படும் குரு பகவான் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 26-05-2026 அன்று தனது உச்ச ராசியான கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். உச்ச வீடு என்பதால் இங்கு அவர் தனது முழு பலன்களையும் வெளிப்படுத்துவார். மேஷ ராசிக்கு மே 26-05-2026 அன்று குரு பெயர்ச்சியின் போது தைரிய ஸ்தானத்திலிருந்து சுப ஸ்தானத்திற்கு மாறுகிறார். மேஷ ராசியின் 9 மற்றும் 12ஆம் வீட்டின் அதிபதியான குரு பகவான் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி தரக்கூடிய அமைப்பாகும்.
நான்காம் வீட்டில் சஞ்சரிக்கும் குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையால் அஷ்டம ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் தொழிற் ஸ்தானத்தையும், ஒன்பதாவது பார்வையால் அயன சயன போக ஸ்தானத்தையும் பார்க்கிறார். மேலும் இந்த காலகட்டத்தில் குரு பகவான் அதிசார சிம்ம ராசிக்கு சென்று 43 நாட்கள் நேர் கதியிலும், 42 நாட்கள் வக்ர கதியிலும் (01.11.2026 முதல் 25.01.2027 வரை) சஞ்சரிப்பார். இந்த குரு பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
ஒரு ஜாதகத்தில் சுக ஸ்தானம் என்பது சொத்து, சுகம், ஆரோக்கியம், கல்வி, தாயின் உடல்நிலை ஆகியவற்றை பற்றி கூறக்கூடிய இடமாகும். இந்த இடத்தில் குரு பகவான் உச்சம் பெறுகிறார் என்பது சுகமான அமைப்பாகும். 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடக ராசியில் குரு பகவான் தன்னை புனிதப்படுத்திக் கொள்ளும் ஸ்தானமாகும். இதன் காரணமாக மேஷ ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். நம்மால் அனைத்தையும் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை உருவாகும்.
யாரைப் பற்றியும் கவலைப்படாமல், எதைப் பற்றியும் சிந்தனை செய்யாமல், எதிர்காலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு வெற்றி நடை போடுவீர்கள். உங்கள் வாழ்நாள் கனவுகளையும், லட்சியங்களையும் நிறைவேற்ற குரு பகவான் முழு ஆசிகளை வழங்குவார். நான்காம் வீடு சொத்து, சுகங்களை மட்டும் தரக்கூடிய இடம் அல்ல. அது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் இடமாகும். இங்கு தேவ குருவான குரு பகவான் அமர்வது நோயின் தாக்கத்தை குறைக்கும்.
குருவின் ஐந்தாம் பார்வை எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் விழுகிறது. இந்த இந்த வீடு எதிர்காலத்திற்கு தேவையான முதலீட்டை குறிக்கக்கூடிய இடமாகும். இந்த இடத்தை குரு பகவான் பார்ப்பதால் எதிர்காலத்திற்கு தேவையான சேமிக்க கூடிய வகையில் உங்களின் வாழ்வாதாரம் உயரும். “எலி வலையானாலும் தனி வலை வேண்டும்” என்ற பழமொழிக்கு ஏற்ப உங்களுடைய சொந்த வீடு வாங்கும் கனவு நிறைவேறும் காலமாகும். குரு பகவானின் பார்வை எட்டாம் இடத்தில் விழுவதால் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. சொத்து சுகங்களை அமைத்து தரக்கூடிய யோகத்தை குரு பகவான் உங்களுக்கு அளிப்பார். இதற்கு முன் வாங்கிய பழைய சொத்துக்களின் மதிப்பு உயரும். புதிய சொத்துக்களும் சேரும்.
சுக ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது அவரின் ஏழாம் பார்வை பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் விழுகிறது. பத்தாம் இடத்தில் குருவின் பார்வை இருப்பதால் இதுவரை நீங்கள் அனுபவித்து வந்த தீய வினைகள் குறைந்து, நல்ல வினைகள் உங்களை வந்து சேரும். பிறவிப் பயன்படி இந்த ஜென்மத்தில் நீங்கள் அனுபவிக்க வேண்டிய அனைத்து நல்ல பலன்களையும் இந்த காலகட்டத்தில் அனுபவிப்பீர்கள். கர்ம பலன்கள் அனைத்தும் தீரும். தொழிலில் முன்னேற்றம் இல்லாமல் வந்த நிலையில் இருந்து வந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகளும், ஒப்பந்தங்களும் தேடி வரும். தொழில் வளர்ச்சி உச்சத்தை அடையும். படித்து முடித்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கைகூடும்.
Numerology: உங்கள் பிறந்த தேதிப்படி எந்த வயதில் நீங்கள் கோடீஸ்வரர் ஆவீங்கன்னு தெரியுமா?
குரு பகவான் தனது ஒன்பதாவது பார்வையால் பன்னிரண்டாம் வீடான அயன, சயன, விரய ஸ்தானத்தை பார்க்கிறார். இதன் காரணமாக தூக்கம் இல்லாமல் தவித்து வந்தவர்கள் இனி நிம்மதியாக தூங்குவீர்கள். மன நிம்மதி கிடைக்கும். குறைந்த ஊதியத்தில் வேலை பார்த்து வந்தவர்களுக்கு நிறைவான ஊதியம் கிடைக்கும் வகையில் நல்ல வேலை வாய்ப்புகள் வரும். பாஸ்போர்ட், விசா சார்ந்த பிரச்சினைகள் அகலும். வெளிநாட்டில் வேலை புரிவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சுப விரயங்கள் உண்டாகும். தடைபட்ட திருமணம், வீடு கட்டுதல் போன்ற சுப விசேஷங்கள் நடக்கும். மருத்துவச் செலவுகள் கணிசமாக குறையும்.
குரு பகவான் தனது சொந்த நட்சத்திரமான புனர்பூசத்தில் சஞ்சரிக்கும் அந்த 16 நாட்கள் (02-06-2026 முதல் 18-06-2206 வரை) தடைபட்ட அனைத்து சுப நிகழ்ச்சிகளையும் நடத்தி தருவார். பெற்றோர்கள் வயது வந்த குழந்தைகளுக்கு திருமணம் செய்து மகிழ்வீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குலதெய்வமே குழந்தையாக வந்து பிறக்கக்கூடிய வரன் கிடைக்கும். பேரன், பேத்தியை கொஞ்சி மகிழும் பாக்கியத்தை குரு பகவான் உங்களுக்கு வழங்குவார். ஆன்மீக சுற்றுலா சென்று வரும் வாய்ப்புகள் உருவாகும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதை செய்ய வேண்டும் என்று விரும்பினீர்களோ அதை செய்து முடிக்க, அனைத்து சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் உருவாகும்.
மேஷ ராசிக்கு தொழில் ஸ்தான அதிபதி மற்றும் லாப ஸ்தான அதிபதியான சனி பகவானின் பூச நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலமாகும். (19-06-2026 முதல் 19-8-2026 வரை). இந்த இரண்டு மாத காலம் மேஷ ராசிக்கு பொற்காலம் என்று சொல்லக்கூடிய வகையில் அதிகமான லாபம் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். தொழிலில் புதிய முதலீடுகளை செய்வீர்கள். இதுவரை வசூல் ஆகாமல் இருந்த பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகள் கைக்கு வந்து சேரும்.
மேஷ ராசிக்கு மூன்று மற்றும் ஆறாம் வீடுகளின் அதிபதியான புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலமாகும். (20-08-2026 முதல் 31-10-2026 வரை) இந்த காலகட்டத்தில் வீடு மாற்றம், வேலை மாற்றம், ஊர் மாற்றம் ஆகியவை நிகழலாம். விரும்பத் தகுந்த நிகழ்வுகள் நடக்கும். அடமானம் வைத்திருந்த நகைகளை மீட்டு எடுப்பீர்கள்.
26-01-2027 முதல் 13-04-2027 வரை வக்ர கதியில் ஆயில்ய நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிப்பார். இந்த காலகட்டத்தில் புதிய வேலை மாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு இருக்கும் வேலையை விடுதல் கூடாது. குருவும், கேதுவும் இணைந்து நான்காம் வீட்டில் பயணிக்கும் காலம் என்பதால் பொருளாதார நெருக்கடிகள் வரக்கூடும். எனவே தொழில் உத்தியோகத்தில் சிந்தித்து செயல்படுவது நல்லது.
அதிசாரமாக சிம்ம ராசிக்கு நேர் கதியில் சென்று பயணிக்கும் குரு பகவான், சில நாட்கள் கேதுவுடன் இணைவதால் பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் யாரையும் நம்ப கூடாது. சொந்த முயற்சிகளையே நம்பி செயல்பட வேண்டும். முக்கியப் பணிகளை பிறரிடம் ஒப்படைக்கக் கூடாது. பண பரிவர்த்தனைகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். (01-11-2026 முதல் 13-12-2026 வரை) இழப்புகளையும், சில நம்பிக்கை துரோகங்களையும் சந்திக்கலாம்.
14-12-2026 முதல் 25-01-2027 வரை சிம்ம ராசியில் வக்ர கதியில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது சொத்துக்களில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். சொத்துக்களை வாங்குவது, விற்பது போன்ற விஷயங்களில் இழப்புகளை சந்திக்கலாம். தாயின் ஆரோக்கியத்தில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு சில பின்னடைவுகள் ஏற்படலாம்.
மேஷ ராசியில் பிறந்தவர்கள் முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சாற்றி, திருப்புகழ் பாடி வழிபட்டு வர நல்ல பலன்கள் கிடைக்கும். வியாழக்கிழமைகளில் குரு பகவானை வழிபடுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)