
கன்னி ராசியினருக்கு 4,7 ஆம் வீட்டின் அதிபதியான குரு பகவான் பதினோராம் வீடான லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார். இது விரும்பிய மாற்றங்கள் அனைத்தையும் வழங்கக்கூடிய குரு பெயர்ச்சியாகும். குருவின் ஐந்தாம் பார்வை மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்திலும், ஏழாம் பார்வை ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும், ஒன்பதாம் பார்வை ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்திலும் பதிய இருக்கிறது. மேலும் குரு்பகவான் அதிசாரமாக சிம்ம ராசியில் 43 நாட்கள் நேரடியாகவும், 42 நாட்கள் வக்ரகதியிலும் பயணிப்பார். இதன் காரணமாக கன்னி ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
கோச்சாரத்தில் லாப ஸ்தானத்தில் கிரகங்கள் வருவது மிகச்சிறந்த அமைப்பாகும். தற்போது குரு பகவான் லாப ஸ்தானத்தில் உச்சம் அடைவது மிக உன்னதமான அமைப்பாகும். உங்களுக்கு இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகளை அனைத்தும் சமாளித்து வெற்றியைப் பெறுவீர்கள். எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கும். உங்கள் கற்ற கல்வி இந்த சமயத்தில் உங்களுக்கு கை கொடுக்கும். பணமழை பொழியும்.
கடந்த காலங்களில் பட்ட வேதனைகள் குறையத் துவங்கும். தைரியமான செயல்பாடுகள், தெளிவான பேச்சுக்கள் ஆகியவை உங்களது தனித்து அடையாளம் காட்டும். பாலிசி முதிர்வு, பிஎஃப் பணம், சம்பள பாக்கிகள் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கலாம். பூர்வீக சொத்துக்கள் மூலமாக ஆதாயம் உண்டாகும். தாமதங்கள், தடைகள் அனைத்தும் விலகி முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.
லாப குருவின் ஐந்தாம் பார்வை மூன்றாம் இடமான சகாய ஸ்தானத்தில் விழுகிறது. எனவே இந்த காலகட்டத்தில் தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிகளைப் பெறுவீர்கள். ஞாபக சக்தி அதிகரிக்கும். செயல் திறன் உயரும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். பாகப்பிரிவினைகளில் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும். சகோதரர் வழியில் நன்மைகள் உண்டாகும். வீடு மாற்றம், வேலை மாற்றம், இடமாற்றம் ஆகியவை ஏற்படலாம்.
வெளிநாட்டிற்கு வேலைக்காக செல்ல நேரிடும். அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு முயற்சிகள் வெற்றியாகும். இழந்த அனைத்தையும் திரும்பப் பெறுவீர்கள். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள். உங்களிடம் கோபப்பட்டவர்கள் தவறை உணர்ந்து உங்களுடன் இணைவார்கள். நீதிமன்ற வழக்குகள் சாதகமாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் கைகூடும்.
லாப குருவின் ஏழாம் பார்வை ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் விழுகிறது. இதன் காரணமாக பொன்னும், பொருளும் சேரும். சுப பலன்கள் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். எடுக்கும் காரியங்களில் தனி முத்திரை பதிப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் சீராகும். பிள்ளைகள் மூலம் பெருமை வந்து சேரும். வாழ்வாதாரம் உயரும். அடமானத்தில் இருந்த நகைகள், பத்திரங்களை மீட்பீர்கள். தேவையான உதவிகள், தேவையான சமயத்தில் சேரும். குலதெய்வ அருள் பரிபூரணமாக கிடைக்கும். வாழ்வில் புதுப்புது மாற்றங்கள் உண்டாகும். வளைகாப்பு, கிரகப்பிரவேசம், திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். வாங்கிய கடன்கள் அடைபடும். தந்தை வழி உறவுகளால் செல்வம் கிடைக்கும்.
குருவின் ஒன்பதாம் பார்வை ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் படுகிறது. இதன் காரணமாக நன்மையும், மேன்மையும் உண்டாகும். ஆயுள் சார்ந்த பயம் நீங்கும். திடீர் ஏற்றங்களும், மாற்றங்களும் உருவாகும். உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். நினைத்த காரியங்கள் நடக்கும். முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வீர்கள். திருமணத்திற்கு நல்ல இடத்திலிருந்து வரன் தேடிவரும். தடைகள் அகலும். தொழில் நடத்துபவர்களுக்கு உகந்த காலமாகும். கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதிகள், பகைமையை மறந்து ஒன்று சேர்வீர்கள். வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கலாம். வாழ்க்கைத் துணை பக்க பலமாக இருப்பார்கள். நீங்கள் செய்த தான, தர்மங்கள் உங்களுக்கு மிகுந்த புண்ணியத்தை அளிக்கும்.
01-06-2026 முதல் 18-06-2026 வரை குரு பகவான் தனது சொந்த நட்சத்திரமான புனர்பூசத்தில் சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டம் கன்னி ராசிக்காரர்களுக்கு நீண்டகால விருப்பங்களையும், ஆசைகளையும், தேவைகளையும் நிறைவேற்றும். எதிலும் முதன்மையாக இருப்பீர்கள். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பதவி உயர்வுகள் ஏற்படும். ஆரம்பத்தில் சில தடைகள் ஏற்பட்டாலும் முடிவில் வெற்றி கிடைக்கும். நல்ல சொத்துக்கள் அமையும். பொன், பொருள், சீர் சேரும். வாழ்க்கைத் துணையுடன் இணைந்து புதிதாக தொழில் தொடங்கி, மிகப்பெரிய அளவில் உயர்வீர்கள். நண்பர்களுடன் கூட்டாக இணைந்து சொத்துக்களை வாங்குவீர்கள்.
சனி பகவானின் சொந்த ராசியான பூச நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்க இருக்கிறார். 19-06-2026 முதல் 19-08-2026 வரை அவர் பூச நட்சத்திரத்தில் இருப்பார். இந்த காலகட்டம் கன்னி ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அளிக்கும். உங்கள் கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். எதிர்கால தேவைகளுக்காக நல்ல திட்டங்களில் முதலீடு செய்வீர்கள். உடன் பிறந்தவர்களால் நன்மைகள் உண்டாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும். சிலர் தொழில் மற்றும் வேலையை மாற்றுவதற்கான வாய்ப்புகளும் உருவாகும்.
20-08-2026 முதல் 31-10-2026 வரை குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் நேர்கதியில் பயணிப்பார். அதன் பின்னர் மீண்டும் 15-04-2027 முதல் 26-06-2027 வரை ஆயில்ய நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார். புதன் பகவானுக்கு சொந்தமான இந்த நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிப்பது தொழில் ரீதியான முன்னேற்றத்தைக் கொண்டு வரும். அபரிமிதமான வருமானம் வரும். கனவுகள் நனவாகும். பிள்ளைகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பால் உங்கள் அந்தஸ்து உயரும். அரசு சார்ந்த காரியங்களில் வெற்றி உண்டாகும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். இதன் காரணமாக விரயச் செலவுகள் சுப செலவுகளாக மாறும்.
26-01-2027 முதல் 13-04-2027 வரை ஆயில்ய நட்சத்திரத்தில் வக்ர கதியில் குரு பகவான் பின்னோக்கி சஞ்சரிப்பார். இந்த சமயத்தில் தொழிலில் சில ஏற்ற, இறக்கங்கள் ஏற்படலாம். கேதுவும் இணைவதால் சில மாற்றங்களை சந்திக்க நேரிடலாம். போட்டி, பொறாமைகள் அதிகரிக்கக்கூடும். இதை சமாளிக்க பழகுவது நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். குடும்ப உறவுகளின் பேசும் பொழுது வார்த்தைகளில் கவனம் தேவை.
அதிசாரமாக சிம்ம ராசிக்கு சென்று நேர்கதியில் பயணிக்கும் குரு பகவான் 01-11-2026 முதல் 13-12-2026 வரை சிம்ம ராசியில் இருப்பார். இங்கு கேதுடன் இணைவதால் விரயச் செலவுகள் ஏற்படலாம். சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம். சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடைபெறும். மாமனார் மற்றும் மாமியார் வழி ஆதரவு கிடைக்கும். புதிய வேலை தேடும் முயற்சியில் வெற்றி உண்டாகும்.
14-12-2026 முதல் 25-01-2027 வரை சிம்ம ராசியில் வக்ர கதியில் குரு பகவான் சஞ்சரிப்பார். இந்த காலகட்டத்தில் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இறை நம்பிக்கை கூடும். பூர்வீக சொத்து பிரச்சனைகளில் பொறுமையை கையாள வேண்டும். புதிய வேலைக்கான அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை கையில் வாங்கிய பிறகு பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை கைவிட வேண்டும்.
ஐயப்பன் வழிபாடு மிகுந்த நன்மை தரும். ஏழை எளியவர்களுக்கு உணவு தானம் வழங்குவது நன்மைகளை அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)