"அப்பா சந்தோசமா இருக்கட்டும்.. தொந்தரவு பண்ணாதீங்க".. - உருக்கமான கடிதம் எழுதி தற்கொலை செய்த வாலிபர்!!

By Asianet TamilFirst Published Sep 3, 2019, 12:17 PM IST
Highlights

சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது சாவிற்கு யாரும் காரணமில்லை என்று கடிதம் எழுதி தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் முத்துக்குமார்(28). சண்முகம் சினிமா துறையில் பணியாற்றுபவர்களுக்கு உணவு பரிமாறும் வேலை பார்த்து வருகிறார். முத்துக்குமார் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்திருக்கிறார்.

சண்முகத்தின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இதனால் தந்தையும் மகனும் மட்டும் தனியாக வசித்து வந்திருக்கின்றனர். அவர்கள் இருவருக்குள் அடிக்கடி சண்டை வந்திருக்கிறது. இதன்காரணமாக இருவரும் பேசிக்கொள்வதில்லை என்று கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் தனது அறையில் இருந்து வெகுநேரமாக முத்துக்குமார் வெளியே வராமல் இருந்திருக்கிறார். இதனால் சந்தேகம் அடைந்த சண்முகம் தனது மகனின் அறைக்கு சென்று பார்த்திருக்கிறார். அங்கு முத்துக்குமார் தூக்கில் பிணமாக தொங்கியிருக்கிறார். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சண்முகம் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் கூறியிருக்கிறார். அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்,முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது அறையை சோதனை செய்தனர். அங்கு அவர் தற்கொலைக்கு முன்பாக எழுதிய கடிதம் இருந்தது.

அதில் அவர், "எனது சாவிற்கு யாரும் காரணம் இல்லை.. எனது தந்தை சந்தோசமாக இருக்க வேண்டும். அவரை தொந்தரவு செய்யாதீங்க" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், முத்துக்குமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!