சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் பதாகைகளுடன் இளைஞர்கள்... கஜா புயல் நிவாரணம் கேட்டு முழக்கம்...
டெல்டா மக்களுக்காக ஆஸ்திரேலியாவின் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் பதாகைகள் ஏந்தி உலகம் முழுவதும் தெரியப்படுத்தினர்.
'கஜா' புயல் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 63 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்தப் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த தென்னை, வாழை, நெற்பயிர் என விவசாயப் பயிர்கள் புயலால் சாய்ந்துள்ளன.
அதேபோல் ஆடு, மாடுகள் இறந்துள்ளன. மக்கள் அனைவரும் நிவாரண முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. வீடுகளை இழந்து தவித்து வரும் மக்களுக்கு, தமிழக அரசு ஒருபுறம் நிவாரணம் வழங்கிவந்தாலும், தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள் முன்வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாகச் சென்று உதவிகள் வழங்கிவருகின்றனர்.
இதேபோல் திரைப் பிரபலங்களும் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர். சிலர் நேரடியாகவும், சிலர் அரசாங்கத்தின் மூலமாகவும் உதவி வருகின்றனர்.
இந்நிலையில் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்தியா- ஆஸ்திரேலியா 3வது டி20 போட்டியின் போது கஜா புயல் நிவாரணம் வேண்டி தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் கையில் #SaveDelta #SaveTamilnaduFormer #GajaCycloneRelief என எழுதப்பட்ட பதாகைகள் ஏந்தி உலகம் முழுவதும் தெரியப்படுத்தினர்..