woman beating small girl viral video

சாப்பிடும் போது உணவை சிந்தியதற்காக, 6 வயது சிறுமியை கொடூரமாகத் தாக்கிய பெண்ணை மலேசிய போலீசார் கைது செய்துள்ளனர்.

கண்மூடித்தனமாக..

சிறுமியை மரத்தினால் ஆன ஸ்கேலால் 30க்கும் மேற்பட்ட தடவைகள் கண்மூடித்தனமாக அலர் அடிக்கும் காட்சியை அடையாளம் தெரியாத நபர் விடியோ எடுத்து அதனை சமூக தளத்தில் வெளியிட்டார்.

இந்த காட்சி ‘வைரலாக’ பரவியது. மலேசியாவின் தமன் புசங் பெர்டானா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 2 நிமிடம், 50 நொடிகள் ஓடும் இந்த வீடியோவில் ஒரு சிறுமி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

சிந்திய உணவு

அவளுக்கு முன்பு ஒரு பெண் உட்கார்ந்து கொண்டிருந்தார். சிறுமியை எழுந்து போகுமாறு அப்பெண் கூற, அச்சிறுமி எழுந்து செல்லும் போது சில உணவுப் பொருட்கள் சிந்துகின்றன.

இதைப் பார்த்த அப்பெண்மணி மர ஸ்கேலால் சிறுமியை பலமாக அடிக்கிறார். சிறுமி கதறி அழுதும், அவளுக்கு கருணை பிறக்கவில்லை.

‘செத்துப்போய்விடு’

தொடர்ந்து அடித்துக் கொண்டே, "எத்தனை முறை அடித்தாலும் உனக்கு ஒழுங்காக சாப்பிடுவது எப்படி என்று தெரியவில்லை. செத்துப்போ, எங்காவது போய்விடு, எங்காவது போய் செத்துவிடு. எப்படி சாப்பிடுவது என்று கூட தெரியவில்லை" என்று கத்துகிறார்.

பிறகு அடிப்பதை நிறுத்திவிட்டு வேறு அறைக்குச் செல்லும் பெண், மீண்டும் வந்து அந்த சிறுமியை அடிக்கிறார். அப்போது இந்த வீடியோவை எடுப்பவர், ‘‘குழந்தையை அடிக்காதீர்கள், ஏன் அடிக்கிறீர்கள், இதைப் புகைப்படம் எடுத்து செய்தியில் வெளியிடுவேன்’’ என்று எச்சரிக்கிறார்.

மற்றொரு வீடியோ

உடனே அந்த பெண், ‘‘சிறுமியை உள்ளேப் போ’’ என்று கூறுவதுடன் ஒரு வீடியோ முடிகிறது. அடுத்த விடியோவில், அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள், அந்த பெண்ணிடம் வாக்குவாதம் செய்கிறார்கள்.

‘‘ஏன் இப்படி ஒரு குழந்தையைப் போட்டு அடிக்கிறாய்?’’ என்று மற்றவர்கள் கேட்க, ‘‘நான் அந்த குழந்தையை அடிக்கவில்லை. கண்டிக்கிறேன்’’ அவ்வளவுதான் என்று மிகவும் ‘கூலாக’ பதில் சொல்கிறார்.

அதிரடியாக கைது

மேலும், அந்த குழந்தையின் பெற்றோர் பற்றியும் சிலர் பேசுகிறார்கள். அதற்கு, அப்பெண், ‘‘இந்த குழந்தையை நான் தத்தெடுத்து வளர்க்கிறேன்’’ என்று பதில் கூறுகிறார்.

இந்த வீடியோவைப் பார்த்ததும் மலேசியா போலீசார் உடனடியாக களத்தில் இறங்கி அந்தப் பெண்ணை தேடிக் கண்டுபிடித்தனர். அந்தப் பெண்ணை கைது செய்து, பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டனர்.