அமெரிக்கா செல்ல வேண்டுமா? உங்கள் சோசியல் மீடியா ரொம்ப பத்திரம் மக்களே!
அமெரிக்கா தனது விசா விதிகளில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது, இதன்படி விசா விண்ணப்பதாரர்கள் தங்கள் சமூக வலைதள தகவல்களை பகிர வேண்டும். இந்த நடவடிக்கை விண்ணப்பதாரர்களின் பின்னணியை ஆய்வு செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சமூக வலைதள கணக்குகள் கட்டாய சோதனை
அமெரிக்கா செல்லும் பல இந்தியர்களுக்கு “அமெரிக்கன் ட்ரீம்” போல இருக்கிறது. ஆனால், இப்போது அந்த பயணம் சற்று கடினமாகும் நிலை உருவாகியுள்ளது. மார்ச் 30 முதல் அமெரிக்கா தனது விசா விதிகளில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இனிமேல், விசா பெற விண்ணப்பிப்பவர்கள் தங்கள் சமூக வலைதள தகவல்களையும் பகிர வேண்டிய அவசியம் உள்ளது.
அமெரிக்க வெளியுறவு துறை அறிவிப்பு
அமெரிக்க வெளியுறவு துறை அறிவிப்பின்படி, வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு விண்ணப்பிக்கும் நான்இமிக்ரண்ட் (குடியேறாத) விசா விண்ணப்பதாரர்களின் சமூக வலைதள கணக்குகள் பரிசோதிக்கப்படும். இதில் A-3, C-3, G-5, H-3, H-4 போன்ற பல பிரிவுகள் அடங்கும். இந்த நடவடிக்கை மூலம் விண்ணப்பதாரர்களின் பின்னணி மற்றும் செயல்பாடுகளை விரிவாக ஆய்வு செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்வது
இந்த புதிய நடைமுறையின் முக்கிய நோக்கம், அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்வதே ஆகும். விண்ணப்பதாரர்களின் சமூக வலைதள பதிவுகள், கருத்துகள் மற்றும் ஆன்லைன் செயல்பாடுகள் மூலம் பொதுமக்கள் பாதுகாப்புக்கு ஆபத்தானவர்களா என்பதை மதிப்பீடு செய்ய முடியும். ஏதேனும் சந்தேகத்துக்கிடமான தகவல்கள் இருந்தால், விசா மறுக்கப்படும் வாய்ப்பு அதிகம்.
மாணவர் மற்றும் எக்ஸ்சேஞ்ச் விசாக்கள்
இதே போன்ற விதிமுறைகள் ஏற்கனவே மாணவர் மற்றும் எக்ஸ்சேஞ்ச் விசாக்களுக்கு நடைமுறையில் இருந்தது. கடந்த டிசம்பர் மாதம் H-1B வேலை விசா மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த சோதனை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்த நடைமுறை மேலும் பல பிரிவுகளுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விசா விண்ணப்பதாரர்கள்
புதிய விதிமுறைகளின்படி, விசா விண்ணப்பதாரர்கள் தங்களது சமூக வலைதள கணக்குகளை பொதுமக்கள் பார்வைக்கு திறந்தவையாக வைத்திருக்க வேண்டும். தூதரக அதிகாரிகள் அந்த செயல்பாடு கணக்குகளில் உள்ள பதிவுகள், மற்றும் டிஜிட்டல் தகவல்களை ஆய்வு செய்வார்கள். ஆகவே, அமெரிக்கா செல்ல திட்டமிடுபவர்கள் தங்களது ஆன்லைன் செயல்பாடுகளில் கவனம் செலுத்துவது இப்போது மிகவும் அவசியமாகியுள்ளது.

