ஆஸ்கர் விருது விழாவை நடத்தும் அமைப்பிலிருந்து ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பதவி விலகியுள்ளார். நிகழ்ச்சி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவிருந்த நிலையில் நடிகர் வில் ஸ்மித் ராஜினாமா செய்துள்ளார்.

94-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை முதன்முறையாக வென்ற நடிகர் வில் ஸ்மித், நிகழ்ச்சி தொகுப்பாளரை கன்னத்தில் அறைந்த சம்பவம் உலகளவில் பரபரப்பாக பேசப்பட்டது. தொகுப்பாளர் கிறிஸ் ராக், வில் ஸ்மித் மனைவியின் தோற்றத்தை பற்றி கிண்டலடித்ததால் ஆத்திரமடைந்த வில் ஸ்மித், மேடையில் ஏறி கிறிஸ் ராக் கன்னத்தில் பளார் என ஒரு அறைவிட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனையடுத்து சிறந்த நடிகருக்கான விருதை வாங்கிய வில் ஸ்மித் மேடையிலே கண்ணீருடன் தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார். மேலும் இதுக்குறித்து தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர், அகாடமி விருதுகள் நிகழ்ச்சியில் எனது நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் மன்னிக்க முடியாதது. நகைச்சுவை என்பது எனது வேலையின் ஒரு பகுதியாக இருந்தாலும், ஜடாவின் உடல்நிலை குறித்த கிண்டலடித்ததால் என்னால் தாங்க முடியவில்லை. அதனால் தான் உணர்ச்சிவசப்பட்டு அடித்துவிட்டேன்.

நான் உங்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன், கிறிஸ். நான் எல்லை மீறி நடந்துகொண்டேன், நான் செய்தது தவறு. நான் வெட்கப்படுகிறேன், எனது செயல்கள் நான் இருக்க விரும்பும் மனிதனைக் குறிக்கவில்லை. அன்பும் கருணையும் நிறைந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஆஸ்கர் நிகழ்ச்சியில் கிறிஸ் ராக்கை அறைந்த பின் வில் ஸ்மித்திடம் நிகழ்ச்சியைவிட்டு வெளியேற கோரப்பட்டது என்று ஆஸ்கர் அகாடமி தெரிவித்துள்ளது. மேலும் வில் ஸ்மித்திற்கு எதிராக "ஒழுங்கு விசாரணை" தொடங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆஸ்கர் அகாடமியின் தலைமைக் குழு உறுப்பினர்களின் சந்திப்பு வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது என்றும் அதன் பிறகு வில் ஸ்மித் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இச்சூழலில் ஆஸ்கர் விருது விழாவை நடத்தும் அமைப்பிலிருந்து ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பதவி விலகியுள்ளார். நிகழ்ச்சி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவிருந்த நிலையில் நடிகர் வில் ஸ்மித் ராஜினாமா செய்துள்ளார். Acedemy of motion picture arts and science அமைப்பின் பதவியை நடிகர் ஸ்மித் ராஜினாமா செய்துள்ளார்.