கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு நாளை மரண தண்டனை தேதி குறிக்கபப்ட்டுள்ள நிலையில், அவரை காப்பாற்றுவதற்கான கடைசி வாய்ப்பு குறித்து பார்ப்போம்.

What Is The Last Hope To Save Nimisha Priya?: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா (38). இவர் ஏமனில் செவிலியராக பணிபுரிந்தார். கடந்த 2017ம் ஆண்டு தனது தொழில் பங்குதாரரான ஏமன் நாட்டைச் சேர்ந்த தலோல் அப்டோ மஹ்தி என்பவரை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. விசாரணையின் முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டு நிமிஷா பிரியாவுக்கு 2020ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. நிமிஷா பிரியா காப்பாற்ற இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தபோதிலும் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நிமிஷா பிரியா தப்பிப்பாரா?

நிமிஷா பிரியாவை தூக்கிலிடும் தேதி நாளை (ஜுலை 16) என்ற நிலையில், அவரது தண்டனையை நிறுத்துவதற்கு இப்போது வேறு வழியில்லை என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்நிலையில், நிமிஷா பிரியாவை காப்பாற்றுவதற்கு கடைசியாக ஒரு வழி பிறந்துள்ளது. கொலை செய்யப்பட்ட தலாலின் குடும்பத்தினருடன் மற்றொரு கலந்துரையாடல் நடைபெறுகிறது. தலாலின் நெருங்கிய உறவினரும், ஹுதைதா மாநில நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியுமான ஷேக் ஹபீப் உமர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்பார்.

கடைசி நம்பிக்கை இதுதான்

நாளை நடைபெறவிருந்த தண்டனை விசாரணையை ஒத்திவைக்க அட்டர்னி ஜெனரலுடன் இந்த கூட்டம் நடைபெறுகிறது. காந்தபுரம் ஏ.பி. அபுபக்கர் முஸ்லியார் மூலம் இந்த கலந்துரையாடல் நடைபெறுகிறது. நிமிஷா பிரியா பிரச்சினையில் காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முஸ்லியாரின் தலையீட்டைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைகள் எல்லா வகையிலும் சாதகமாக முன்னேறி வருவதாக காந்தபுரம் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை

தலாலின் கொலை, தாமர் பிராந்தியத்தின் குடும்பங்கள், பழங்குடியினர் மற்றும் குடியிருப்பாளர்கள் மத்தியில் மிகவும் உணர்ச்சிபூர்வமான பிரச்சினையாகவும் உள்ளது. அதனால்தான் இவ்வளவு காலமாக அந்தக் குடும்பத்தினரை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. காந்தபுரத்தின் தலையீட்டால்தான் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முதலில் முடிந்தது. பிரபல அறிஞரும் சூஃபி ஷேக் ஹபீப் உமர் பின் ஹஃபீலின் தலையீட்டின் மூலம் குடும்பத்தினர் மறுபரிசீலனை செய்ய வற்புறுத்தப்பட்டனர்.

இரத்தப் பணத்தை ஏற்றுக் கொள்வார்களா?

அவரது ஆலோசனையை குடும்பத்தினர் மதித்தார்கள். இன்றைய கலந்துரையாடலில், இரத்தப் பணத்தை ஏற்றுக்கொள்வது குறித்தும் இறுதி முடிவை எடுக்க முயற்சிக்கின்றனர். குடும்பத்தினரை வற்புறுத்த முயற்சிகளுக்கு மத்தியில், நாளைய தண்டனையை தற்காலிகமாக ஒத்திவைக்க காந்தபுரத்தின் கோரிக்கையை ஏமன் அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் அலுவலகம் அறிவித்தது. ஆனால் இந்த கலந்துரையாடலை தலோல் குடும்பம் ஏற்றுக்கொள்ளுமா? என்பது தெரியவில்லை. அவர்கள் ஏற்றுக்கொண்டால் தான் மரண தண்டனையில் இருந்து நிமிஷா பிரியாவால் தப்பிக்க முடியும்.