உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதலை தொடங்கியதில் இருந்து, இதுவரை பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக 148 சட்ட விரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் போரில் மொத்தமாக இதுவரை 12 பத்திரிக்கையாளர் பலியாகியுள்ளதாக அந்நாட்டின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 

கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதலை தொடங்கியது. உக்ரைனின் முக்கிய நகரங்களில் தொடர்ந்து குண்டு மழைகளை பொழிந்து வருகிறது ரஷ்யா படை. தலைநகர் கீவ், கார்கீவ், மரியுபோல், கெர்சன்,சுமி, லீவ் உள்ளிட்ட நகரிங்களில் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுகிறது.போர் தாக்குதலில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுவரை 30 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் போலந்து, ரூமேனியா, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் தாக்குதல் ஒரு மாதம் தாண்டி தொடர்ந்து வரும் நிலையில், போரில் இதுவரை 136 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ரஷ்யாவுடனா வர்த்தக தொடர்பை இதுவரை 400 நிறுவனங்கள் நிறுத்திவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதற்றமான போர் சூழல் மத்தியில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் 35 மணி நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் போது, கடைகள், மருந்தகங்கள்,எரிபொருள் எரிப்பு நிலையங்கள் மற்றும் பொது போக்குவரத்து இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.போர் தாக்குதலால் உக்ரைனின் பெரிய பெரிய கட்டிடங்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை சேதமடைந்து உருகுலைந்துள்ளன. மேலும் உக்ரைன் நாட்டின் பல்வேறு இராணுவ தளங்கள் தொடர் தாக்குதலில் சிக்கி வருகின்றன.

இதனிடையே உக்ரைனின் மேற்கு எல்லை நாடான போலந்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பயணம் மேற்கொண்டார். இச்சூழலில் மேற்கு பகுதியில் உள்ள லீவ் நகரை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. எரிபொருள் கிடங்கு மற்றும் ராணுவ தொழிற்சாலையை குறிவைத்து ரஷ்யா நடத்திய இந்த தாக்குதலில் 5 பேர் காயமடைந்ததாக லீவ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.அமெரிக்க அதிபர் பைடன், உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா மற்றும் பாதுகாப்புதுறை அமைச்சர் ஓலெக்ஸி ரெஸ்னிகோவ் ஆகியோரை சந்தித்துப் பேசினார். மேலும் போலந்து நாட்டில் உள்ள அமெரிக்க படையினர் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

இச்சூழலில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதலை தொடங்கியதில் இருந்து, இதுவரை பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக 148 சட்ட விரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் போரில் மொத்தமாக இதுவரை 12 பத்திரிக்கையாளர் பலியாகியுள்ளதாக அந்நாட்டின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மேலும் 10 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர 56 ஊடகத்தினருக்கு எதிராக ரஷ்யா குற்றச் செயல்களில் ஈடுப்பட்டுள்ளதாகவும் இதில் 15 பேர் வேறு நாட்டை சார்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன்- 4 பேர், செக் குடியரசு - 2, டென்மார்க்- 2, அமெரிக்கா - 2, ஐக்கிய அரபு அமீரகம் - 2, சுவிட்சர்லாந்து - 1 அடங்குவர். மேலும் ஊடக அலுவலகம் தாக்குதல், டிவி டவர் தாக்குதல் என பல வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.