இந்தியா-பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் பிரச்சினையை அந்நாடுகள் பேச்சு மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். இதில் இங்கிலாந்து தலையிடாது என இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தெரிவித்தார்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வாரம் தோறும் எம்.பி.களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது பாகிஸ்தானில் பிறந்தவரும், தற்போது இங்கிலாந்து எம்.பி.யாக இருக்கும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த யாஸ்மின் குரேஷி பேசுகையில், “ பிரதமர் தெரசே மே அடுத்த மாதம் இந்தியா பயணம் செல்லும் போது, அந்நாட்டு பிரதமர் மோடியிடம், காஷ்மீர் பிரச்சினை , அங்கு நடக்கும் மனித உரிமைகள் மீறல்கள் மற்றும், 1948-ம் ஆண்டு ஐ.நா. தீர்மானம் குறித்து பேசுவீர்களா? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து பிரதமர் தெரசா மே பேசுகையில், “ நான் இந்த பதவிக்கு வருவதற்கு முன், இருந்த பிரதமர் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் பிரச்சினையில் என்ன நிலைப்பாடு எடுத்தாரோ அதையேதான் நானும் எடுப்பேன். காஷ்மீர் பிரச்சினை என்பது இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் பேச்சு மூலம் தீர்க்கப்பட வேண்டியது'' எனத் தெரிவித்தார்.

இதன் மூலம் நவம்பர் 6-ந்தேதி முதல் இந்தியாவில் 3 நாட்கள் பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, காஷ்மீர் பிரச்சினை குறித்து பேசமாட்டார் என்று தெளிவாகத் தெரிகிறது. இந்த பயணத்தின் போது, பிரதமர் தெரசா மே உடன் பல்வேறு துறை அமைச்சர்கள், வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் வருகின்றனர்.