பாகிஸ்தான் பிரதமர் தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்வதை நிறுத்த வேண்டும், மத சகிப்புத்தன்மையோடு நடந்து, ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு அடிப்படை உரிமைகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், ஜம்மு,காஷ்மீர் மக்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் காஷ்மீர் தேசிய கட்சியின் தலைவர் டாக்டர் சபீர் சவுத்ரி தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன் நேற்றுமுன்தினம்ஆர்ப்பாட்டம் நடத்தி, தூதரிடம் தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, 

“ ஜம்மு,காஷ்மீர் மக்கள் மீதான நலனில் உண்மையில் நலன் கொண்டவராக பிரதமர் நவாஸ் ஷெரீப் இருந்தால், தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்வது, தீவிரவாதம் ஆகியவற்றை நிறுத்த வேண்டும். மதசகிப்புத்தன்மை நடந்து, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வாழும் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும். 

பிரதமர் நவாஸ் ஷெரீப் நியாயமான கண்ணோட்டத்துடன் இஸ்லாம் மத்ததின் போதனைகளை படிக்க வேண்டும். நாங்கள் உங்களுக்கு சமமானவர்களாக இல்லை என நீங்கள் கருதினால், மனிதர்களாகக் கருதுங்கள். மரியாதையுடன், சுயமரியாதையுடன் வாழ விடுங்கள். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இரு பகுதிகளும் எங்கள் சொத்தாகும். 

இஸ்லாம் மதம் அண்டை வீட்டில் வசிப்பவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனக் கூறுகிறது.ஆனால், பாகிஸ்தான் இஸ்லாம் மதத்துக்கு மாறாக அனைத்தையும் செய்து, முரண்பாடாக நடந்து கொள்கிறது. எங்கள் மீது அடக்குமுறைகள் செய்து, பிரச்சினைகளை உண்டாக்கி, அடிப்படை உரிமைகளை நசுக்குகிறது. ஏற்கனவே இந்தபகுதியில் மோசமான சூழல் நிலவி வரும் வேளையில் இந்த செயல்பாடு மிக்க வருத்தத்தை தருகிறது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை மனுவில், ஜம்மு காஷ்மீர் சுதந்திர முன்னணி, ஐக்கிய காஷ்மீர் மக்கள் தேசிய கட்சி, ஜம்மு காஷ்மீர் மக்கள் தேசிய கட்சி, ஜம்மு காஷ்மீர் நண்பர்கள், ஜம்முவின் குரல் ஆகிய கட்சிகள் கையொப்பமிட்டுள்ளன.