srilankan minister talks about tamil fishermen boats

இலங்கை கடற்படையினரால், கடந்த 2015ம் ஆண்டில் இருந்து சிறைபிடிக்கப்பட்டு இருக்கும் தமிழக மீனவர்களின் 42 படகுகள் விரைவில் நிபந்தனையுடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த நாட்டு மீன் வளத்துறை அமைசசர் மகிந்தா அமரவீரா தெரிவித்தார்.

950 பேர் கைது

இலங்கை கடற்படையினரால் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 950-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். 145 படகுகள் கைப்பற்றப்பட்டன.

145 படகுகள்

மீனவர்களின் போராட்டங் களை அடுத்து மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால், 2 மாத சிறைவாசத்துக்குப் பின்னர் தமிழக மீனவர்கள் அவ்வப்போது விடுவிக்கப்படுகின்றனர். தற்போது 11 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். 145 படகுகளும் இலங்கை கடற்படை வசம் உள்ளன.

இந்நிலையில், இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்தா அமரவீரா கொழும்பில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-

நிபந்தனையுடன் விடுவிப்பு

கடந்த 2015ம் ஆண்டில் இருந்து இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களின் 42 படகுகள், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த படகுகளை நாங்கள் விடுவிக்க முடிவு எடுத்துள்ளோம். இனிமேல், எங்களுடைய சர்வதேச எல்லைக் கோட்டைத் தாண்டி மீன்பிடிக்க வரக்கூடாது என்ற நிபந்தனையுடன் அந்த படகுகளை நாங்கள் விடுவிக்க இருக்கிறோம்

இரட்டை மடிவலை

இதற்கு முன் அந்த படகுகளையும், தளவாடங்களையும் விடுவிக்க கூடாது என்ற முடிவுடன் இருந்தோம். ஆனால், இப்போது, இரட்டை மடிவலை மூலம் மீன் பிடிக்கும் முறைக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது.

தீர்வு இல்லை

இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்கும் முன், உள்நாட்டு மீனவ அமைப்புகளின் கருத்துக்களையும் கேட்டு முடிவு எடுப்போம். இலங்கை கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பது கடந்த 35 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இரு நாடுகளிலும் பல அரசுகள் அமைந்தபோதிலும், பாக் ஜலசந்தி பகுதியில் நிலவும் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை.

கைது செய்வோம்

இந்தியர்களின் படகுகளை விடுவிக்கிறோம் என்பதால், அவர்கள் எங்கள் பகுதியில் மீன்படிக்கலாம் என்று அர்த்தமில்லை. அவர்கள் இலங்கை கடற்பகுதியில் நுழைந்தால் கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.