இலங்கையின் பிரதமராக மீண்டும் மகிந்த ராஜபக்சே பதவியேற்பதற்கான வேலைகளை முடுக்கி விட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இலங்கையின் கடந்தாண்டு பொருளாதார வீழ்ச்சியையும், இதைத் தொடர்ந்து அந்த நாட்டில் எழுந்த மக்கள் எழுச்சியையும் இந்த நூற்றாண்டில் எந்த நாடும் கண்டு இருக்காது. அந்தளவிற்கு அதிபரின் மாளிகை சூறையாடப்பட்டது. அவரது அலுவலகம் நொறுக்கப்பட்டது. நாட்டை விட்டே அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன் சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்தார். பின்னர், இலங்கையில் நிலைமை சரியான பின்னர் இலங்கை திரும்பினார். பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவும் பதவியை ராஜினாமா செய்தார். அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டார். பிரதமராக தினேஷ் குணவர்த்தன தேர்வு செய்யப்பாட்டார்.

இந்த நிகழ்வுகள் எல்லாம் இன்றும் இலங்கயின் வரலாற்றில் நீங்காத வடுவாக அமைந்துவிட்டது. இதற்கு முன்பாக நாட்டை நிர்வகித்து வந்த ராஜபக்சே குடும்பத்தினரால் தான் நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்தது என்று கூறி மக்கள் தெருக்களுக்கு வந்து பல மாதங்கள் போராட்டம் நடத்தினர். கொரோனாவுக்குப் பின்னர், நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்தது. இதற்குக் காரணம், அத்தியாவசியப் பொருட்களுக்கு இறக்குமதியை நம்பி இருந்ததுதான். இந்த வகையில், நாட்டின் முக்கிய துறைகளான ஆடை தயாரிப்பு, சுற்றுலா ஆகியவை கொரோனா தொற்று காரணமாக முடங்கியது. அந்நிய செலாவணியும் குறைந்தது. இறக்குமதி செய்ய நிதியில்லை. எரிபொருள் இறக்குமதி செய்யக் கூட நிதியில்லை.

Canada bans Gotabaya,Mahinda Rajapaksa:இலங்கை முன்னாள்அதிபர்கள் கோத்தபய, மகிந்தா ராஜப்கசேவுக்கு கனடா அரசு தடை

இந்த நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறியது. மக்கள் உணவு இல்லாமல் பஞ்சத்திற்கு தள்ளப்பட்டனர். இது மக்களுக்கு ஆத்திரமூட்டியது. இன்றும் மக்களின் அன்றாட வாழ்க்கை சீரான நிலைக்கு வரவில்லை. இந்த நிலையில், முட்டை முதல் இறக்குமதி செய்து வருகிறது இலங்கை அரசு. இதற்கும் உள்நாட்டு முட்டை தயாரிப்பாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்னும் ஆங்காங்கே அரசுக்கு, ராஜபக்சே குடும்பத்திற்கு எதிராக எதிர்ப்புகள் இருந்து வருகிறது. ஐஎம்எப்பிடம் கேட்ட நிதி உதவியும் இன்னும் முழுமையாக இலங்கைக்கு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் மீண்டும் அந்த நாட்டின் பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை பொதுஜன பெரமுன கட்சியில் இருக்கும் அதிருப்தி உறுப்பினர்களை பிரதமராக மகிந்த ராஜபக்சே வருவதற்கு ஆதரிக்க வேண்டும் என்று கட்சி தலைமை அணுகி இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்தக் கட்சியின் உறுப்பினராக இருக்கும் தினேஷ் குணவர்த்தன தான் பிரதமாராக இருக்கிறார். 

Sri Lanka Crisis:இலங்கைப் பொருளாதாரச் சீர்குலைவுக்கு ‘அந்நிய சக்திகளே’ காரணம்: மகிந்தா ராஜபக்சே குற்றச்சாட்டு

ஆனால், மகிந்த ராஜபக்சேவை ஆதரிக்கப் போவதில்லை என்று கட்சியில் இருந்து வெளியேறி இருக்கும் எம்பி சன்ன ஜெயசுமனா தெரிவித்துள்ளார். மேலும், அதிபராக, பிரதமராக பதவி வகித்த மகிந்த ராஜபக்சே அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று போர்க் கொடி தூக்கியுள்ளார். இந்த தகவலை மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவும் மறுத்து இருக்கிறார்.

இந்தத் தகவலை பிரதமர் தினேஷ் குணவர்த்தன மறுத்து இருக்கிறார். அவரது அலுவகத்தில் இருந்து வெளியாகி இருக்கும் செய்தியிலும், பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு தினேஷ் குணவர்த்தனாவுக்கு எந்த அழுத்தமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.