இலங்கையில் தற்போது அசாதாரண சூழல் நிலவும் நிலையில், அரசுக்கு எதிராக போராட்டங்களும் வலுபெற தொடங்கியுள்ளதால், அதிரடியாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை பொருளாதாரம் :

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டு காலமாக சிக்கலைச் சந்தித்து வருகிறது. அத்யாவசிய பொருட்கள் விலை உயர்வால் மக்கள் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர். கொரோனாவால் நாட்டின் பிரதான வருவாய்த் துறையாக விளங்கும் சுற்றுலாவில் முடக்கம் ஏற்பட்டதால் அன்னியச் செலாவணி இருப்பு குறைந்து இலங்கையின் ரூபாய் மதிப்பு வெகுவாக சரிந்திருக்கிறது.

இலங்கையில் நிலவும் பொருளாதார சிக்கலால் கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எரிபொருட்கள் பற்றாக்குறையால் தினமும் 13 மணி நேரம் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டை நேற்று முன்தினம் இரவு முற்றுகையிட்டனர்.

இலங்கை அதிபருக்கு எதிராக போராட்டம் :

உடனடியாக பதவி விலக வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியபடி போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர், அப்போது போராட்டக்கார்களில் சிலர் அங்கிருந்த தடுப்பு வேலிகளை அகற்றி, ராணுவ வாகனத்திற்கு தீ வைத்தனர். மேலும் வீட்டு சுவரை இடித்து செங்கற்களை போலீசார் மீது வீசி தாக்கியதால், அங்கு போர்க்களம் போல காட்சி அளித்தது.

இந்நிலையில் மக்கள் போராட்டத்தின் காரணமாக இலங்கையில் அமைதியின்மை ஏற்பட்டதையடுத்து அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சஷவின் இல்லத்தை முற்றுகையிட நூற்றுக்கணக்கான மக்கள் முயற்சித்த ஒரு நாளுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்கு விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.