பாக். இடைக்கால பிரதமராக ஷாகித் ககான் அப்பாஸி நியமனம்...!!!
பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் செரீப் நீக்கப்பட்டதையடுத்து இடைக்கால பிரதமராக ஷாகித் ககான் அப்பாஸி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பனாமா நாட்டில் உள்ள புகழ்பெற்ற, 'மொசாக் பொன்சேகா' சட்ட நிறுவனத்தின் உதவியுடன், பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள், வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளனர்.
இதுதொடர்பான ஆவணங்கள், பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியானது. அந்த பட்டியலில் நவாஸ் ஷெரிப்பின் பெயரும் இருந்ததால், அவருக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்காக அமைக்கப்பட்ட குழு முன்பாக நவாஸ் ஷெரிப், அவரது இரு மகன்கள், மகள் மற்றும் அவரது குடும்பத்தினர் பலரும் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
இதைதொடர்ந்து, சிறப்பு கூட்டு புலனாய்வு குழு, தனது அறிக்கையை கடந்த 10-ம் தேதி அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அதில், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகவும்,அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வழக்குபதிவு செய்யப்பட்டு பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இதையடுத்து பனாமா முறைகேடு வழக்கில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து நவாஸ் ஷெரீப்பை உச்சநீதிமன்றம் பதவி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் செரீப் நீக்கப்பட்டதையடுத்து இடைக்கால பிரதமராக ஷாகித் ககான் அப்பாஸி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.