"தமிழக மீனவரை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்லவில்லை"- ராஜபக்சேவின் மகன் திமிர் பேச்சு…
தனுஷ்கோடி அருகே ஆதம்பாலம் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சி மடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பிரிட்ஜோ என்ற மீனவர் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி ராமேஸ்வரம், தங்கச்சி மடம், நாகை, ஜெகதாபட்டணம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் நேரில் வந்து தங்களது பிரச்சனைக்கு தீர்வு சொல்ல வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இப்பிரச்சனை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே, தமிழக மீனவரை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்ல வாய்ப்பில்லை என தெரிவித்தார்.
அதே நேரத்தில் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நமல் ராஜபக்சே தெரிவித்தார்.