விபத்தில் காதலன் மரணம் – உயிரணுவில் கருவை சுமக்கும் காதலி
விபத்தில் இறந்த காதலனின் உயிரணு மூலம் கருவை சுமக்க ஆஸ்திரேலிய இளம்பெண் முடிவு செய்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் தூவோம்பா பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்வா டேவிஸ். ரக்பி விளையாட்டு வீரர். இவரது காதலி அய்லா கிரஸ்வெல்.
ஜோஸ்வா சில மாதங்களில் தமது காதலியான அய்லா கிறிஸ்வெலை திருமணம் செய்து கொள்ள இரு வீட்டார் சம்மதத்துடன் முடிவு செய்திருந்தார். ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம், ஜோஸ்வா விபத்து சிக்கி இறந்துவிட்டார்.
இதனால் பெரும் துயரத்தில் ஆழ்ந்த அய்லா, தனது காதலர் எப்போதும் தன் அருகிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக , இறந்த ஜோஸ்வாவின் உயிரணுவில் இருந்து கருவுற முடிவு செய்தார். அந்த அதிரடி முடிவை, தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். அய்லாவின் இந்த முடிவு, இரு குடும்பத்தினருக்கும் சரி என்று தோன்றியது. இதையடுத்து, ஜோஸ்வாவின் உயிரணுவில் இருந்து கருவுற முடிவு செய்த அய்லாவுக்கு ஆதரவளித்தனர்.
விளையாட்டு வீரர்கள் பலர் தங்கள் உயிரணுவை மருத்துவமனையில் சேமித்து வைத்திருப்பது போன்று ஜோஷ்வாவும் ஏற்கனவே சேமித்து வைத்திருந்தார்.
இதை தொடர்ந்து, நீதிமன்றத்தை நாடிய அய்லா, ஜோஷ்வாவின் உயிரணுவை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஜோஷ்வாவுடன் 3 குழந்தைகளை பெற்றெடுக்க முடிவு செய்திருந்ததாகவும், தனது இந்த முடிவில் அவர் கண்டிப்பாக பெருமைப்படுவார் எனவும் நீதிமன்றத்தில் அய்லா வாதிட்டார்.
அவரது வாதத்தை கேட்ட நீதிமன்றம், அவருக்கு அனுமதி வழங்கியது. மேலும் சேமிக்கப்பட்டிருந்த விந்தணு, கருவுறுதலை நிகழ்த்தும் அளவிற்கு ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கூடிய விரைவில், செயற்கை கருத்தரித்தல் மூலம் ஜோஸ்வாவின் குழந்தையை தனது வயிற்றில் சுமக்க உள்ளார் அய்லா.
இதுகுறித்து அய்லா கூறுகையில், “ஜோஸ்வாவும், நானும் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என திட்டமிட்டுருந்தோம். ஆனால் அதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டார். இருப்பினும் அவரது கனவை நினைவாக்கும் முயற்சியில் வெற்றி பெற்று விட்டேன்.”என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.