பெட்ரோல் லாரி வெடித்து சிதறியதில் 123 பேர் பலி... பாகிஸ்தானில் நிகழ்ந்த கோர விபத்து!
பாகிஸ்தானில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்ததில் 123 பேர் சம்பவ இடத்திலேய உயிரிழந்தனர்.
பஞ்சாப் மாகாணாம், பஹாவல்பூரில், பெட்ரோல் ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் இருந்து கசியும் பெட்ரோலை சேகரிக்க அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.
அப்போது, லாரி திடீரென வெடித்துச் சிதறியது. அப்போது, மிகப் பெரிய அளவில் தீப்பிழம்புகள் ஏற்பட்டதாகவும், அது சுற்றுப் பகுதியில் இருந்தவர்கள் மீது விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
பெட்ரோல் சேகரித்துக் கொண்டிருந்த 123-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும், ஏராளமானோர் படுகாயமடைந்தனர். அவர்கள், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
லாரியில் இருந்து பெட்ரோல் சேகரித்துக் கொண்டிருக்கம் வேளையில், சிலர் புகைபிடித்துக் கொண்டிருந்ததாகவும், இதனால், விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் பலர், மிக மோசமான நிலையில் உள்ளதாகவும், இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த விபத்துக்கு காரணம் குறித்து, பாகிஸ்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.