வரும் 10-ம் தேதி அமெரிக்க அதிபராக ஒபாமாவின் இறுதி உரை….!!
அமெரிக்க அதிபராக, தனது இறுதி உரையை வரும் 10-ம் தேதி தனது சொந்த நகரான சிகாகோவில் நிகழ்த்தவுள்ளதாக பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக, கடந்த 2009-ம் ஆண்டு பராக் ஒபாமா பதவியேற்றார். இந்நிலையில், தனது பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, தனது இறுதி உரையை வரும் 10-ம் தேதி தனது சொந்த நகரான சிகாகோவில் நிகழ்த்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனது உரையில், 8 ஆண்டு கால வியத்தகு பயணத்திற்காக அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த வியத்தகு பயணம் குறித்து நன்றி சொல்வதற்கான வாய்ப்பு குறித்து சிந்தித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள ஒபாமா, 220 ஆண்டுகளுக்கு முன்பு, அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் உரை நிகழ்த்தியதை முன்னுதாரணமாகக் கொண்டு, தான் பிரிவு உரை நிகழ்த்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Donald Trump, ஒபாமா கொண்டு வந்த பல திட்டங்களை ரத்து செய்யப்போவதாக பிரச்சாரம் செய்த போதிலும், தேர்தல் வெற்றிக்குப் பிறகு, எந்த பிரச்சினையும் இன்றி அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்று ஒபாமா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.