நாடும் இல்லை... வீடும் இல்லை... தனித் தீவில் இருந்து தப்பி ரஞ்சிதாவுடன் ஓடிய நித்தியானந்தா..!
நித்தியானந்தா ஈகுவேடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கியதாக கூறப்பட்ட நிலையில், அங்கிருந்து நித்யானந்தா தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்திலிருந்து கடந்த மாதம் இரண்டு சிறுமிகள் மாயமானதாக புகார் எழுந்ததை அடுத்து நித்தியானந்தா மீது குஜராத் போலீஸ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. அவர் மீது குழந்தை கடத்தல் மற்றும் ஆசிரமத்திற்கு நன்கொடை வாங்க அவர்களை தவறாக பயன்படுத்தியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்குள்ள ஆசிரமத்திற்கு சீல் வைக்கப்பட்டது. ஏற்கனவே பெங்களூருவில் நித்தியானந்தாவிற்கு பாலியல் வழக்கு பதிவான போதே அவர் நாட்டை விட்டு தப்பியோடிவிட்டதாக குஜராத் தெரிவித்திருந்தது.
போதாக்குறைக்கு, தென் அமெரிக்க நாடான ஈக்வெடார் அருகே சொந்தமாக தனித்தீவை வாங்கி, அதனை தனிநாடாக அறிவித்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார் நித்தியானந்தா. கைலாசா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த நாட்டிற்கென தனி இணையதளத்தை உருவாக்கியுள்ள அவர், கைலாசா குறித்த முழு விவரங்களையும் அதில் வெளியிட்டுள்ளார். இந்த சூழலில் நித்தியானந்தாவிற்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸை பிறப்பிப்பதற்கு குஜராத் போலீஸ் இண்டெர்போல் உதவியை நாடியுள்ளது.
இந்நிலையில் நித்தியானந்தா ஈக்வேடாருக்கு அருகே தீவு வாங்கியதில் துளியும் உண்மையில்லை என்று அந்நாடு மறுத்துள்ளது. இதுகுறித்து ஈக்வேடார் நாடு வெளியிட்ட தகவலில் “ ஈகுவேடாரில் நித்தியானந்தாவிற்கு எந்த தீவையும் விற்கவில்லை, மேலும் அவருக்கு அடைக்கலமும் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக நித்தியானந்தா இணையதளத்தில் வெளியிடும் தகவல் தவறானவை எனவும், அதில் உண்மையில்லை” என்றும் தெரிவித்து இருந்தது.
இதனிடையே, தனக்கு பாதுகாப்பு வழங்கும்படி ஈக்வேடார் நாட்டுக்கு நித்தியானந்தா கோரிக்கை வைத்ததாகவும், அதனை அந்த நாடு ஏற்க மறுத்ததால் அவர் ஹைதி நாட்டிற்கு தப்பி சென்றிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.