ரஷ்யப் படைகளின் மீது 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போர்க்குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிர்ச்சி தரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

ரஷ்யப் படைகளின் மீது 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போர்க்குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிர்ச்சி தரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். 45 நாட்களுக்கு மேலாக இந்த தாக்குதல் தொடரும் நிலையில் உக்ரைனின் தலைநகர் கீவ் தவிர மற்ற நகரங்களை ரஷ்யப் படைகள் பெரிய அளவில் தாக்குதலை நடத்தி உள்ளன. ரஷ்யப் படைகளின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உக்ரைனின் புச்சா நகரில் மட்டும் குறைந்தது 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரஷ்யப்படைகளால் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு ஐ.நா உட்பட சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், புச்சா நகரில் நடந்துள்ள சம்பவங்களை பார்த்தால், அவை போர்க்குற்ற விசாரணைக்கு உத்தரவாதம் அளிக்கின்றன என்று கூறினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதேபோல் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்ட அறிக்கையில், புச்சாவில் நடந்துள்ள இந்த கொலைகள் இனப்படுகொலைக்கு சமமானது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுக்குறித்து உக்ரைன் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், சமீபத்திய குழந்தை இறப்பு புள்ளிவிவரங்களை வெளியிட்டது. ஒவ்வொரு குழந்தையின் படுகொலைக்கும் ஒரு ரஷ்ய வீரர், ஒரு தளபதி மற்றும் அந்நாட்டு அதிபர் புடின் ஆகியோர் பொறுப்பாவார்கள். இந்த குற்றங்கள் மறக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே ரஷ்யப் படைகள் கிழக்கு உக்ரைனில் மீண்டும் தாக்குதலை நடத்தி வரும் நிலையில் வடகிழக்கு புறநகர்ப் பகுதியான ப்ரோவரியில் படுகொலைகள் குறித்து உக்ரைன் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவில் நடந்த படுகொலைகள் குறித்தும் உக்ரைன் வழக்கறிஞர்கள் குழு ஆய்வு நடத்தி வருகிறது. அந்த நகரத்தில் வீசப்பட்ட கண்ணிவெடிகளை அகற்ற உக்ரைன் படைகள் தீவிரமாக முயன்று வருகின்றன. இந்நிலையில் உக்ரைனின் வழக்கறிஞர் குழு அலுவலகம் அதிர்ச்சி தரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ரஷ்யப் படைகளால் 6,000க்கும் மேற்பட்ட போர்க்குற்றங்கள் நடந்துள்ளன. பொதுமக்களை படுகொலை செய்தல், பெண்கள் பலாத்காரம், குழந்தைகளை கொல்லுதல் போன்ற சம்பவங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி 24 அன்று போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 186 குழந்தைகள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 6,036 போர்க்குற்றங்கள் பதிவாகியுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.