இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் மர்மநபர்கள் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 9 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கிழக்கு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் கவுண்டியில் ரயிலில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 10 பேர் காயமடைந்தனர். இவர்களில் ஒன்பது பேரின் நிலை உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது என்று போக்குவரத்து காவல்துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. டான்காஸ்டரிலிருந்து லண்டன் கிங்ஸ் கிராஸுக்குச் செல்லும் லண்டன் வடகிழக்கு ரயில்வே (LNER) சேவையில் நேற்று இரவு 7.04 மணிக்கு இந்தத் தாக்குதல் நடந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஓடும் ரயிலில் கத்திக்குத்து

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறை இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. "கேம்பிரிட்ஜ்ஷயரில் ரயிலில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தைத் தொடர்ந்து பத்து பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஒன்பது பேருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறை எங்கள் விசாரணைக்கு ஆதரவளிக்கிறது'' என்று போக்குவரத்து காவல்துறை கூறியுள்ளது.

கத்திக்குத்து எதற்காக நடந்தது?

கத்திக்குத்து நடத்திய மர்ம நபர்கள் யார்? அவர்கள் எதற்காக இந்த கொடூர செயலில் ஈடுபட்டனர் என்பது உறுதியாக தெரியவில்லை. "ஹண்டிங்டனுக்குச் செல்லும் ரயிலில் பலர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குறித்து நாங்கள் தற்போது விசாரித்து வருகிறோம். கேம்பிரிட்ஜ்ஷயர் காவல்துறையினருடன் அதிகாரிகளும் சம்பவ இடத்தில் உள்ளனர், மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக தகவல்கள் பகிரப்படும்," என்று BTP கூறியது.

ரயில்கள் நிறுத்தம்

"என்ன நடந்தது என்பதை கண்டறிய நாங்கள் அவசர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம், மேலும் எதையும் உறுதிப்படுத்த சிறிது நேரம் ஆகலாம். இந்த ஆரம்ப கட்டத்தில், சம்பவத்திற்கான காரணங்கள் குறித்து ஊகிப்பது பொருத்தமற்றது" என்று போக்குவரத்து காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து இப்பகுதியில் ரயில்கள் இயக்கப்படவில்லை.

இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வேதனை

இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்த தாக்குதல் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார், இந்த சம்பவம் பயங்கரமானது என்று கூறினார். "ஹண்டிங்டன் அருகே ரயிலில் நடந்த பயங்கரமான சம்பவம் மிகுந்த கவலையளிக்கிறது. பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. மேலும் காவல்துறை வேகமாக செயல்பட்டதற்கு நன்றிகள். மக்கள் காவல்துறையின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்" என்று ஸ்டார்மர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளார்.