மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு 1,503 ஆண்டுகள் சிறை
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு 1,503 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெர்ஸ்நோ நகர நீதிமன்ற வரலாற்றில், யாருக்கும் வழங்கப்படாத அதிகபட்ச சிறைதண்டனை இதுவாகும். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தந்தை, மகளின் பெயரை வெளியிட்டால் வாழ்க்கையை பாதிக்கும் என்பதால், அவர்களின் பெயரை அசோசியேட் பிரஸ் நிறுவனம் வெளியிடவில்லை
கலிபோர்னியாவின் பெர்னோசோ நகரைச் சேர்ந்த 41-வயது தந்தை, தனது மகளை கடந்த 2009ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டுவரை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். வாரத்துக்கு 3 முறை அந்த பெண்ணை பலாத்காரம் செய்து தந்தை துன்புறுத்தியுள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் தனது தந்தையின் கொடுமையைச் சிக்க முடியாமல் போலீசில் புகார் செய்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். கடந்த 2 ஆண்டுகளாக நடந்த விசாரணையின் முடிவில் தந்தை மீதான குற்றம் அனைத்தும் நிரூபிக்கப்பட்டு குற்றவாளி என கடந்த மாதம் நீதிமன்றம் அறிவித்தது.
இது குறித்து அரசு வழக்கறிஞர் நிகோல் கிலாஸ்டன் கூறுகையில், “ சிறுவயதில் இருந்தே இந்தசிறுமி அவரின் உறவினரால் பாலியல் சீண்டல்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளார். ஆனால், அதில் இருந்து பாதுகாக்க வேண்டிய தந்தை அதை தனது இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டார்'' எனத் தெரிவித்தார்.
இந்தநிலையில், குற்றம்சாட்டப்பட்ட 41வயது தந்தைக்கு 1503 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி எட்வர்ட் சர்கிசையன் தீர்ப்பளித்தார். இதுபோன்ற குற்றத்தை செய்தவர்கள் சமூகத்துக்கு மிகவும் ஆபத்தானவர்கள். தான் செய்த குற்றத்துக்கு கொஞ்சம் கூட இந்த நபர் வருத்தமோ, கவலையோ கொள்ளவில்லை. மாறாக, இதுபோன்ற நேரத்தில் தனது மகளை குறைகூறுகிறார் என கடுமையாக நீதிபதி தெரிவித்தார்.
விசாரணையின் போது பாதிக்கப்பட்ட 23 வயது பெண் நீதிபதியிடம் அளித்த சாட்சியில் கூறுகையில், “என்னை எனது தந்தை பாலியல் துன்புறுத்தல் செய்யும் போது நான் மிகவும் சிறியவள். அவரை எதிர்த்து என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை. பாதுகாப்பு அற்றவளாக இருந்தேன். என்னை ஒவ்வொரு முறையும் எனது தந்தை பாலாத்காரம் செய்யும்போது, நான் வலியால் துடித்து துன்பப்படும்போது, அது குறித்து எனது தந்தை சிறிதுகூட கவலைப்பட்டதில்லை என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.