காபூல் குண்டு வெடிப்பு தாக்குதல் - 50 பேர் உயிரிழப்பு என தகவல்....
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்திய தூதரகம் அருகே சக்தி வாய்ந்த கார் குண்டு தாக்குதலில் 50 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகரமான காபூலில் வெளி நாடுகளின் தூதர்கள் தங்கி இருக்கும் குடியிருப்பு ஒன்று உள்ளது. இதனால் இங்கு பலத்த ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய தூதரகம் அருகே இன்று காலை கார் குண்டு மூலம் தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதி முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.
இதில் இந்திய தூதரகத்தின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் சேதம் அடைந்தன. இப்பகுதியில் தான் ஜனாதிபதி மாளிகை மற்றும் வெளிநாட்டு தூதர்களின் வீடுகள் இருக்கிறது.
உயிர் சேத விவரம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. சக்தி வாய்ந்த கார் குண்டு தாக்குதலில் 50 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தற்கொலை படை தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.
இதனிடையே கார் குண்டு தற்கொலை படை தாக்குதலில் இந்திய தூதரக அதிகாரிகள்மறறும் ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் கடவுள் அருளால் பத்திரமாக உள்ளனர் என வெளியுறவு மந்திரி சுஷ்மாசுவராஜ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.