- Home
- உலகம்
- தீயை அணைக்க பெட்ரோலா..? தலிபான்களுடன் அமைதி பேச்சுக்கு பயங்கரவாதிகளை அனுப்பும் பாகிஸ்தான் ..!
தீயை அணைக்க பெட்ரோலா..? தலிபான்களுடன் அமைதி பேச்சுக்கு பயங்கரவாதிகளை அனுப்பும் பாகிஸ்தான் ..!
தலிபான்கள் இப்போது பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது தெளிவு. தான் வளர்த்த கடாவே தன் மார்பில் பாயும் நிலையை பாகிஸ்தான் இன்று எதிர்கொள்கிறது. பயங்கரவாதத்தின் மூலம் அமைதியைக் கொண்டுவர நினைப்பது, தீயை அணைக்கப் பெட்ரோலை ஊற்றுவதற்குச் சமம்.

தூதர்களா? மரணத் தூதுவர்களா?
பொருளாதாரச் சீரழிவு, உள்நாட்டு அரசியல் குழப்பம், எல்லையில் போர் எனச் சுழற்றி அடிக்கப்படும் சுழலில் சிக்கியிருக்கும் பாகிஸ்தான், இப்போது ஒரு விபரீதமான தற்கொலை முயற்சியில் இறங்கியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் மூண்டுள்ள மோதலைத் தணிக்க, சர்வதேச அளவில் தேடப்படும் மூன்று பயங்கரவாதிகளை அமைதித் தூதர்களாக காபூலுக்கு அனுப்பியுள்ளது பாகிஸ்தான். வேலியே பயிரை மேய்ந்த கதை என்பது போல, பயங்கரவாதத்தை வளர்த்தவர்களையே வைத்து அமைதி பேச முற்படுவது பாகிஸ்தானின் கையறு நிலையைக் காட்டுகிறது.
பாகிஸ்தான் அனுப்பியுள்ள அந்த மூன்று 'மதத் தலைவர்கள்' (பாகிஸ்தான் அரசு இவர்களை இப்படித்தான் அழைக்கிறது) சாதாரணமானவர்கள் அல்ல. அவர்கள் கைகளில் படிந்திருப்பது இரத்தக் கறை.
ஃபஸ்லூர் ரெஹ்மான் கலீல்: ஒரு காலத்தில் ஒசாமா பின்லேடனின் வலது கையாகச் செயல்பட்டவர். ஹர்கத்-உல்-முஜாஹிதீன் அமைப்பின் தலைவராக இருந்து, தற்போது காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கும் மதரஸாக்களை நடத்தி வருகிறார்.
அப்துல்லா ஷா மஜார்: இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதி மசூத் அசாருக்கு மிகவும் நெருக்கமானவர். ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் நிழலில் வளர்ந்த இவர், தலிபான் தலைவர்களுடன் நெருக்கமான உறவு கொண்டவர் என்பதால் தூதராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
காரி சஜித் உஸ்மான்: சோவியத் யூனியனுக்கு எதிரான போரில் தலிபான்களுக்குத் துணை நின்றவர். பழைய உறவுகளைப் புதுப்பித்து தலிபான்களைச் சமாதானப்படுத்த இவர் அனுப்பப்பட்டுள்ளார்.
ஏன் இந்த அடிபணிதல்?
சீனா, கத்தார், சவுதி அரேபியா எனப் பல நாடுகள் பஞ்சாயத்து செய்தும், தலிபான்கள் இறங்கி வரவில்லை. பாகிஸ்தானுக்குள் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தும் தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்பைத் தலிபான்கள் ஆதரிப்பதுதான் இந்த மோதலுக்கு முக்கியக் காரணம். "பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்களைத் தடை செய்து ஒரு 'ஃபத்வா' (மதக் கட்டளை) பிறப்பியுங்கள்" என்று பாகிஸ்தான் வைத்த கோரிக்கையை தலிபான் தலைவர் ஹிபதுல்லா அகுன்சாதா அலட்சியமாக நிராகரித்துவிட்டார்.
பொருளாதார நெருக்கடியும் போர் அச்சமும்
ஏற்கனவே ஈரான் எல்லையில் ஒரு பக்கம் பதற்றம், மறுபக்கம் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் போர் என பாகிஸ்தான் திணறி வருகிறது. கையில் காசில்லாமல் சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்திக் கொண்டிருக்கும் வேளையில், தலிபான்களுடன் ஒரு முழு அளவிலான போரைச் சந்திக்கும் சக்தி இஸ்லாமாபாத்திற்கு இல்லை. இதனால் தான், முறையான தூதரக அதிகாரிகளை அனுப்பாமல், தலிபான்களுக்குப் பிடித்தமான 'ஜிஹாதி' மொழியில் பேசும் பயங்கரவாதிகளையே தூதர்களாக அனுப்பியுள்ளது.
பாகிஸ்தானின் இரட்டை வேடம் அம்பலம்
பயங்கரவாதத்தை ஒழிக்கப் போகிறோம் என்று உலக நாடுகளிடம் நிதி வாங்கும் பாகிஸ்தான், அதே பயங்கரவாதிகளைத் தூதர்களாகப் பயன்படுத்துவது அதன் நயவஞ்சகத்தை உலகிற்கு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. தலிபான்கள் இப்போது பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது தெளிவு. தான் வளர்த்த கடாவே தன் மார்பில் பாயும் நிலையை பாகிஸ்தான் இன்று எதிர்கொள்கிறது.
பயங்கரவாதத்தின் மூலம் அமைதியைக் கொண்டுவர நினைப்பது, தீயை அணைக்கப் பெட்ரோலை ஊற்றுவதற்குச் சமம். பாகிஸ்தானின் இந்த 'பயங்கரவாத தூதுக்குழு' வெற்றி பெறுமா அல்லது விபரீதத்தில் முடியுமா என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.
