Iran : இனி எங்களை சீண்டுனா விளைவுகள் இன்னும் பயங்கரமா இருக்கும்... இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ஈரான்
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே கடும் சண்டை நிலவி வரும் நிலையில் ஈரான் தரப்பில் இருந்து இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
![iran warns israel if provoked larger operations takes place gan iran warns israel if provoked larger operations takes place gan](https://static-ai.asianetnews.com/images/01hvddft1by6cca7j2recye8fa/Iran-israel-conflict-1713068566570_363x203xt.jpg)
சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரானின் தூதரகம் மீது கடந்த வாரம் இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், முக்கிய தலைவர்கள் உட்பட ஏராளாமானோர் உயிரிழந்தனர். இதனால், இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனால் இரு நாடுகளிலும் பதற்றம் நிலவி வருகிறது.
ஹமாஸ் அமைப்புக்கு ஈரான் ஆயுதங்களை வழங்கி வருவதாக கூறப்பட்டதோடு, இஸ்ரேல் மீது அவர்கள் தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருவதாகவும் அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. அவர்கள் எச்சரித்ததன் படியே, இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கி இருக்கிறது. சுமார் 200 க்கும் மேற்பட்ட டுரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி ஈரான் வான்வெளி தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது.
இதையும் படியுங்கள்... மேற்கு ஆசியாவில் அதிகரிக்கும் பதட்ட நிலை.. ஏர் இந்தியா எடுத்த திடீர் முடிவு - என்ன அது? ஏன்? முழு விவரம்!
ஏற்கனவே இஸ்ரேலின் சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் நிலவி வருகிறது. ஆனால் ஈரான் நடத்திய தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கி உள்ளது. ஈரானின் தாக்குதல் நடத்த பயன்படுத்தும் ட்ரோன்களை இடைமறித்து அமெரிக்கா அழித்து வருவதாக அதன் பாதுகாப்புதுறை தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில் ஈரானின் இராணுவ அதிகாரி முகமது பகேரி அளித்த பேட்டியில், தாக்குதல் வெற்றிகரமாக அமைந்ததாகவும், இரவில் இருந்து காலை வரை நடந்த தாக்குதலில் அனைத்தையும் தாங்கள் அடைந்துவிட்டதாகவும் அவர் கூறி இருக்கிறார். சியோனியர்கள் ஈரானின் சிவப்பு கோடுகளை தாண்டியதால் தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறிய அவர், தற்போது இந்த தாக்குதல் நிறைவடைந்துவிட்டதாகவும், இனி பதிலுக்கு அவர்கள் தாக்குதல் நடத்தினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்றும் எச்சரித்து உள்ளார்.
இதையும் படியுங்கள்... 17 இந்தியர்களுடன் சிறைப்பிடிக்கப்பட்ட சரக்குக் கப்பல்! இஸ்ரேலுடன் மல்லுக்கு நிற்கும் ஈரான்!