சிங்கப்பூரில் இந்திய தொழிலாளி ஒருவர் பணிபுரியும் இடத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சிங்கப்பூரின் ஜூரோங் மேற்கு தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு கட்டுமானப் பணியிடத்தில் இந்திய தொழிலாளி ஒருவர் வாகனம் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 33. சிங்கப்பூரில் ஓட்டுநராக பணியாற்றி வந்த அவர், தனது டிப்பர் வாகனத்தில் இருந்து சரக்கை இறக்கிக் கொண்டிருந்த போது, மற்றொரு கனரக வாகனம் மோதியதில் உயிரிழந்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

விபத்தை ஏற்படுத்திய அந்த கனரக வாகனம் கட்டுமானப் பணியிடத்தில் சரக்குகளை ஏற்றப் பயன்படுத்தப்படும் வாகனம் எனவும், பணியிடத்தில் அந்த வாகனம் பின்னால் வந்த போது, தனது டிப்பர் லரியில் இருந்து சரக்குகளை இறக்கிக் கொண்டிருந்த இந்திய தொழிலாளி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் படுகாயமடைந்த இந்திய தொழிலாளி சம்ப்வ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த தகவலை சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் உறுதிப் படுத்தியுள்ளது.

உயிரிழந்த இந்திய தொழிலாளி பிஎஸ்என் டெக் இன்ஜினியரிங் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். ஸ்டார் ரெடி-மிக்ஸ் நிறுவனத்தின் கட்டுமான பணியிடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பிற்பகல் பிற்பகல் 3.40 மணியளவில் நிகழ்ந்ததாக தெரிவித்துள்ள சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம், விபத்து தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், பணியிடத்தில் அனைத்து வாகன செயல்பாடுகளையும் நிறுத்துமாறு ஸ்டார் ரெடி-மிக்ஸ் நிறுவனத்திற்கு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் மீது ஊழல் புகார்.. யார் இந்த சிங்கப்பூர் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன்?

“பாதுகாப்பு நடவடிக்கையாக, வாகனங்களால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க, சரியான போக்குவரத்து மேலாண்மை திட்டத்தை நிறுவனங்கள் செயல்படுத்த வேண்டும்.” என சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக, மரணம் அல்லது கடுமையான காயத்தை ஏற்படுத்தக்கூடிய பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார சட்டங்களை மீறுவதற்கான அதிகபட்ச அபராதத் தொகை சிங்கப்பூர் டாலர் 20,000லிருந்து, 50,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் மட்டும் ஜூன் 21ஆம் தேதி வரை சிங்கப்பூரில் உள்ள பணியிடங்களில் 14 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 2022ஆம் ஆண்டில் மட்டும் 46 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக 2016ஆம் ஆண்டில் 66 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.