இந்திய எல்லைப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உளவு பார்த்த பாகிஸ்தான் தூதரக அதிகாரி டெல்லியில் கைது செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக, பாகிஸ்தானை விட்டு இந்திய தூதரக அதிகாரி 48 மணிநேரத்திற்குள் வெளியேற வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் அண்மைக் காலமாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய எல்லைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உளவு பார்த்ததாக, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த Mehmood Akhtar என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரனையில், ராஜஸ்தானை சேர்ந்த Maulana Ramzan மற்றும் Subhash Jangir ஆகியோர் மூலமாக உளவு பார்த்து, அதுதொடர்பான தகவல்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு கடந்த ஆறு மாதங்களாக அனுப்பி வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, உளவு பார்த்த குற்றத்திற்காக 48 மணிநேரத்திற்குள் பாகிஸ்தான் தூதரக அதிகாரி Mehmood Akhtar இந்தியாவை விட்டு வெளியேற வேண்டுமென இந்தியா உத்தரவிட்டுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானிலுள்ள இந்திய தூதரக அதிகாரி Surjeet Singh, அங்கு இருக்க தகுதியற்றவர் என கூறி, 48 மணி நேரத்திற்குள் தங்கள் நாட்டைவிட்டு வெளியேறும்படி அந்நாட்டு அரசு சம்மன் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
