கொரோனா வைரஸ் தடுப்பில் இந்தியா முன்னோடியாக உள்ளது.. WHO இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் பாராட்டு..
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதிலும் நோய்த்தொற்றின் எண்ணிக்கையை கணிசமாக குறைப்பதிலும், இந்தியா நல்ல முன்னேற்றம் பெற்றுள்ளது என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார்.
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதிலும் நோய்த்தொற்றின் எண்ணிக்கையை கணிசமாக குறைப்பதிலும், இந்தியா நல்ல முன்னேற்றம் பெற்றுள்ளது என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார். இந்தியாவின் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து சர்வதேச அமைப்புகள் பாராட்டி வரும் நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டு மொத்த உலக நாடுகளையும் பீடித்துள்ளது. இதுவரை 180-க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, துருக்கி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் பத்து இடங்களை பிடித்துள்ளன. அமெரிக்காவுக்கு அடுத்து கொரோனாவால் அதிகம்பேர் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இருக்கிறது. இங்கு 1 கோடிக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் சமீப காலங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் 10 முதல் 17 வயது உடையவர்களில் 25.3 சதவீதம் பேருக்கு உடலில் கோவிட் தொற்றுக்கு எதிரான ஆன்ட்டி பாடி இருப்பது தெரியவந்திருப்பதாக ஐ.சி.எம்.ஆர் அமைப்பின் இயக்குனர் ஜெனரல் பல்ராம் பார்க்கவா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 11,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வரும் நிலையில், அதனால் ஏற்படும் பலி எண்ணிக்கையும் சரிந்து வருகிறது. ஆனாலும் நேற்று ஒரே நாளில் 95 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழப்பின் மொத்த எண்ணிக்கை 1,54,918 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் இந்தியாவில் ஒரே நாளில் 14,488 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 கோடியே 5 லட்சத்து 10 ஆயிரத்து 596 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 54 லட்சத்து 16 ஆயிரத்து 849 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரை மொத்தம் 20 கோடியே 6 லட்சத்து 72 ஆயிரத்து 589 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது. இப்படி இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வரும் நிலையில் இன்னும் ஒரு சில மாதங்களில் அது முற்றாக கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள, உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம், covid-19 நோய்த்தொற்றின் எண்ணிக்கையைக் கணிசமாக குறைப்பதில் இந்தியா மிகப் பெரும் முன்னேற்றத்தை காட்டியுள்ளது. எளிய பொது சுகாதார நடவடிக்கைகளை நாம் பின்பற்றுவதன் மூலம் வைரஸை வெல்ல முடியும் என்பதை இந்தியா உலகிற்கு காட்டி உள்ளது.
கொரோனா ஒழிப்பில் இப்போது இந்தியாவில் தடுப்பூசியும் பயன்படுத்தப்படுவதால் மேலும் மேலும் சிறந்த விளைவுகளை நாம் இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.