குவெட்டா, அக். 26-

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாநிலம், குவெட்டா நகரில் உள்ள போலீஸ் பயிற்சிக் கல்லூரியில் புகுந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் 61 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில் சமீபகாலங்களில் நடந்த தாக்குதலில் இது மிகப் பெரியது எனக் கூறப்படுகிறது.

இது குறித்து குவெட்ட நகர போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது-

பயிற்சிக் கல்லூரி

பலூசிஸ்தான் மாநிலத் தலைநகர் குவெட்டாவில் பழமையான போலீஸ் பயிற்சிக் கல்லூரி உள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட போலீஸ் பயிற்சி மாணவர்கள் போலீசாக பயிற்சி எடுத்து வருகின்றனர்.

3 தீவிரவாதிகள்

இந்நிலையில், நேற்று அதிகாலை 3 தீவிரவாதிகள் கையில் ஏ.கே. 47 ரக துப்பாக்கி, வெடிகுண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்தனர். முதலில் கல்லூரி வாசலில் கண்காணிப்பு பணியில் இருந்த பாதுகாவலர்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டு உள்ளே நுழைந்தனர்.

ஏ.கே.47 துப்பாக்கி

அதிகாலை நேரம் என்பதால், பயிற்சிக்கல்லூரியில் உள்ள மாணவர்கள் அனைவரும் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தனர். அந்த அறைக்குச் சென்ற தீவிரவாதிகள் 3 பேரும் கையில் வைத்திருந்த துப்பாக்கியால், கண்மூடித்தனமாகச் சுட்டனர். இதில் பலர் ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க உயிரிழந்தனர். இந்த காட்சியைப் பார்த்த பல மாணவர்கள் மேற்கூரையை பிய்த்துக்கொண்டு உயிரைக் காப்பாற்ற தப்பித்தனர்.

ஒரு மணிநேரம்

தீவிரவாதிகள் உள்ளே நுழைந்தது தெரியவந்தது, ராணுவத்துக்கு தகவல் தரப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தனர். இதனால், இருதரப்புக்கும் இடையே ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சண்டை நீடித்தது.

வெடிகுண்டு

ஒரு கட்டத்துக்கு மேல் தீவிரவாதிகள் சண்டையில் தாக்குப்பிடிக்க முடியாததாதல், அதில் இருவர், தங்கள் உடம்பில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில் தற்கொலைப்படைத் தாக்குதலில் அங்கு தங்கியிருந்த போலீசார் பலர் உயிரிழந்தனர். அதன் மீதம் இருந்த ஒரு தீவிரவாதியை ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.

20 பேர் கவலை

தீவிரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் 60 போலீசார், ஒரு ராணுவ வீரர் என மொத்தம் 61 பேர் கொல்லப்பட்டனர். 125-க்கும் மேற்பட்ட போலீசார் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை, போலன் மருத்துக்கல்லூரி மருத்துவமனை, ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் 20 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஐ.எஸ் பொறுப்பு ஏற்பு

இது குறித்து எல்லைப் பாதுகாப்படையின் போலீஸ் ஐ.ஜி. மேஜர் ஷெர் ஆப்கன் கூறுகையில், “ இந்த தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளும் பாகிஸ்தான் தலிபானின் லஷ்கர் இ ஜாங்கி அமைப்போடு தொடர்புடைய அல் அலிமி அமைப்பைச் சேர்ந்தவர்கள். தீவிரவாதிகள் தங்கள் கையில் வைத்திருந்த ‘செல்போன்’ மூலம், ஆப்கானிஸ்தானில் இருந்து உத்தரவுகளைப் பெற்று தாக்குதலை நடத்தியுள்ளனர்'' எனத் தெரிவித்தார்.

அதேசமயம், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பம் பொறுப்பேற்றுள்ளது. 3 தீவிரவாதிகள் இந்த தாக்குதலை அரங்கேற்றினார்கள் என்று கூறியுள்ள அந்த அமைப்பு, தாக்குதலுக்கான காரணத்தை தெரிவிக்கவில்லை.

எதற்கு தாக்குதல்?

பஞ்சாப் மாநிலம், குறிப்பாக பலூசிஸ்தானில் உள்ள ஷியா சிறுபான்மையினரை குறிவைத்து ஜாங்கி தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனத் தெரிகிறது.

தளபதி விரைந்தார்

இந்த தாக்குதல் குறித்து செய்தி அறிந்து பாகிஸ்தான் ராணுவத் தளபதி ராகீல் ஷெரீப் குவெட்ட நகருக்கு விரைந்தார். போலீஸ் பயிற்சிக் கல்லூரியில் தாக்குதல் நடத்த இடத்தை பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதன்பின் பலியானவர்களுக்காக நடந்த இரங்கல் தொழுகையிலும் கலந்துகொண்டார். பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு குவெட்டா நகருக்கு விரைந்தார்.

தேடுதல்

பலூசிஸ்தான் உள்துறை அமைச்சர் சர்பாரஸ் பக்தி, இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் மட்டுமே ஈடுபட்டனர் என்பதை உறுதி செய்துள்ளார். அதேசமயம், போலீஸ் பயிற்சிக்கல்லூரியில் தீவிரவாதிகள் யாரேனும் பதுங்கி இருக்கிறார்களா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.