பாகிஸ்தானில் 9ம் தேதி நடைபெறும் கர்தாபூர் வழித்தடம் தொடக்க விழாவுக்கு இந்திய அரசியல்வாதி சித்துவுக்கு முதல் அழைப்பை அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் விடுத்துள்ளார். 

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தனது கடைசி காலத்தை கர்தார்பூர் பகுதியில் கழித்ததாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் பல 100 ஆண்டுகளுக்கு முன்பு கர்தார்பூரில் அவரது நினைவாக தர்பார் சாஹிப் என்ற பெயரில் குருத்வாரா கட்டப்பட்டது. இங்கு செல்வது சீக்கியர்களின் வாழ்நாள் கடமையாக கருதப்படுகிறது. பாகிஸ்தான் எல்லையில் கர்தார்பூர் பகுதி உள்ளது. இதனால் அந்நாட்டுக்கு விசா எடுத்து செல்வதில் சிரமம் இருந்து வந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனையடுத்து இந்தியாவின் தேரா பாபா நானக் குருத்வாராவுக்கும், கர்தார்பூர் குருத்வாரவுக்கும் இடையே வழித்தடம் அமைக்க இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. 

தற்போது வழித்தடம் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. இந்திய பகுதியில் உள்ள கர்தார்பூர் வழித்தடத்தை இந்த மாதம் 8ம் தேதி பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பகுதியில் உள்ள கர்தார்பூர் வழித்தடத்தை அதற்கு அடுத்த நாள் (9ம் தேதி) அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானும் தொடங்கி வைக்க உள்ளனர்.

பாகிஸ்தானில் நடைபெறும் கர்தாபூர் வழித்தடம் தொடக்க விழாவில் பங்கேற்க வருமாறு, இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய காங்கிரஸ் அரசியல்வாதியுமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முறைப்படியான முதல் அழைப்பை விடுத்துள்ளார். 

இந்தியாவிலுள்ள பாகிஸ்தான் தூதர் வாயிலாக சித்துவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் 11ம் தேதி முதல் கர்தாபூர் குருத்வாராவுக்கு தினந்தோறும் 5 ஆயிரம் யாத்ரீகர்கள் செல்லலாம். வாரத்தின் 7 நாட்களும் இந்த வழித்தடம் திறந்திருக்கும். 

இம்ரான் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றது முதல் பாகிஸ்தான் நிகழ்ச்சிகளில் பங்கேற்க சித்து ஆர்வம் காட்டுவது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், சித்துவை பகடை காயாக இம்ரான் கான் பயன்படுத்துகிராறோ என்ற சந்தேகம் நிலவுகிறது