பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் தனது நாட்டின் அணு ஆயுத படைகளை தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டார்.  

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் அமெரிக்கர்கள் மீது கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்கர்களில் பலர் உக்ரைனை தொடர்ந்து ரஷ்யா அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தலாம் என அச்சம் கொண்டுள்ளனர். மேலும் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர். அசோசியேடெட் பிரஸ் NORC பொது ஆய்வு மையம் நடத்திய கருத்து கணிப்பில் அமெரிக்கர்களில் பெரும்பாலானோர் இவ்வாறு பதில் அளித்துள்ளனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ரஷ்யா தங்களின் அணு ஆயுதங்களை கொண்டு நேரடியாக அமெரிக்காவை தாக்கலாம் என அமெரிக்கர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தெரிவித்துள்ளனர். இது போன்ற தாக்குதல் ஏற்பட்டு விடுமோ என பத்தில் மூன்று பேர் கவலை கொண்டுள்ளனர். முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் தனது நாட்டின் அணு ஆயுத படைகளை தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டார். 

அணு ஆயுத தாக்குதல்:

இதன் காரணமாகவே பத்தில் ஒன்பது அமெரிக்கர்கள் புதின் உக்ரைனில் அணு ஆயுத தாக்குதலை நடத்தலாம் என நினைக்கின்றனர். மேலும் பத்தில் ஆறு பேர் இது போன்ற தாக்குதல் நிகழவே கூடாது என கவலை கொண்டுள்ளனர். 

"அவர் கட்டுப்படுத்த முடியாத நபராக இருக்கிறார். அவர் தன்னை சுற்றி இருக்கும் எதை பற்றியும் கவலை கொண்டிருப்பதாக எனக்கு துளியும் தெரியவே இல்லை. மேலும் அவரிடம் அணு ஆயுதங்களும் ஏராளமாக இருக்கின்றன," என்று ஓய்வு பெற்ற ஆய்வாளரான ராபின் தாம்ப்சன் தெரிவித்துள்ளார். 

கருத்து கணிப்பு:

கருத்து கணிப்பில் பங்கேற்றவர்களில் சுமார் 71 சதவீத அமெரிக்கர்கள் உலகின் ஏதேனும் ஒரு பகுதியில் அணு ஆயுதம் பயன்படுத்தப்படலாம் என கருதுவதாக பதில் அளித்து இருக்கின்றனர். கடந்த வெள்ளிக் கிழமை வட கொரியா தனது பெரிய ஏவுகணை பரிசோதனையை மேற்கொள்ளும் முன் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் 51 சதவீதம் பேர் வட கொரியாவின் அணு ஆயுத திட்டம் குறித்து அச்சம் கொண்டுள்ளதாக பதில் அளித்துள்ளனர்.

"ஆய்வுகளின் மூலம் பொது மக்களின் அச்ச உணர்வுகளை கணக்கிடுவது மிகவும் கடினமான காரியம் ஆகும். கருத்து கணிப்புகளில் வெவ்வேறான வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. மேலும் கேள்விகளும் வித்தியாசமாக இடம்பெற்று இருக்கும். உலகை சுற்றி என்ன நடக்கிறது என்பதை பொருத்து அச்ச உணர்வு தானாகவே அதிகரிக்கவும், குறையவும் செய்யும். தற்போது இந்த நிலை அதிகமாக இருக்கும் சூழலில் நாம் இருக்கிறோம். பின் இந்த சூழல் மாறும், மக்கள் இவற்றை மறந்து போவார்கள்," என அணு ஆயுத வரலாற்று வல்லுனர் அலெக்ஸ் வெல்லர்ஸ்டெயின் தெரிவித்தார்.