மலேசியாவின் ஜோகர் பாஹ்ரு மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் நேற்று நடந்த தீவிபத்தில் சிக்கி இந்தியர்கள் 3 பேர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து மலேசியாவின் தெற்கு மாநிலமான ஜோகரின் மூத்த தலைமை தீயணைப்பு அதிகாரி முகம்மது ரிசால் புவாங் கூறுகையில், “ ஜோகர் பாஹ்ரு நகரின் முக்கிய மருத்துவமனையான சுல்தான் அமின்னா 2-ம் தளத்தில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் பலியாகியுள்ளனர், 3 பேர் காயமடைந்தனர்'' எனத் தெரிவித்தார்.

மலேசியா சுகாதாரத்துறை அமைச்சர் நூர் ஹிசம் அப்துல்லா பேஸ்புக்கில் வெளியிட்ட அறிவிப்பில், “ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த 3 நோயாளிகள், பணியாளர்கள் என 6 பேர் தீவிபத்தில் பலியாகியுள்ளனர். அவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். பலியானவர்களில் 4பேர் பெண்கள், 2பேர் ஆண்கள். இதில் 2 பெண்களும், ஒரு ஆணும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். 

தீவிபத்து ஏற்பட்டவுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்ற நோயாளிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். தீ விபத்தில் காயமடைந்த ஒரு நோயாளி, 2 மருத்துவமனை பணியாளர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மின்சார இணைப்பில் ஏற்பட்ட கோளாறு தீ விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இது குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்துள்ளார். 

மேலும், தீவிபத்து நடந்த போது, எடுக்கப்பட்ட படங்களைையும் பேஸ்புக்கில் அவர் பதவிட்டுள்ளார். தீவிபத்து ஏற்பட்டபோது, இந்த மருத்துவமனையில் 234 நோயாளிகளும், 194 பணியாளர்களும் இங்கு பணியாற்றிக்கொண்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நஜீப் ரசாக் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில், “ இந்த தீவிபத்து தொடர்பாக முழுமையான விசாரணை விரைவாக நடத்தி முடித்து, மருத்துவமனையின் பாதுகாப்பு குறித்து முடிவு செய்யப்படும்'' என்று தெரிவித்தார்