கியூபா முன்னாள் அதிபரும் புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்கு டிசம்பர் 4-ந் தேதி நடக்கிறது. இதில், பங்கேற்கப் போவதில்லை என அமெரிக்காவில் வசிக்கும் அவரது சகோதரி ஜூயானிதா காஸ்ட்ரோ தெரிவித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இது குறித்து ஜூயானிதா காஸ்ட்ரோ கூறியதாவது:-

இறுதிச்சடங்கில் நான் பங்கேற்கப் போவதாக வரும் வதந்திகள் பொய். கியூபாவுக்கு செல்லும் எண்ணம் எதுவும் இல்லை. எந்த மனிதர்களின் இறப்பிலும் நான் மகிழ்ச்சி கொள்ளவில்லை. பிடலின் சகோதரியாகவும், என் ரத்தத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறவர் என்ற முறையிலும் அவருடைய இறப்பை ஒரு இழப்பாகத்தான் பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜூயானிதா காஸ்ட்ரோ 1933ஆம் ஆண்டில் பிறந்தவர். பிடலின் அரசியல் செயல்முறைகளில் இவருக்கு உடன்பாடு இல்லை. 1964ல் கியூபாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தார்.

பிடலை ஆட்சியை விட்டு அகற்ற அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. பலமுறை முயற்சி செய்தது. அவர்களுக்கு ஜூயானிதா காஸ்ட்ரோ ஒத்துழைப்பு தந்தார் என்று சொல்வதும் உண்டு.

பிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தாலும், எதிர்ப்பாளர்கள் பலர் அவரது இறப்பை கொண்டாடி வருகிறார்கள். கியூபா கம்யூனிச ஆட்சியில் வெறுப்படைந்து அமெரிக்காவில் குடியேறிய பலர் நேற்று காஸ்ட்ரோவின் இறப்பை கொண்டாடினார்கள்.

மியாமி வீதிகளில் இறங்கி கொண்டாடிய அவர்கள் தங்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக கோஷம் எழுப்பினார்கள்.