நாசாவின் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோருடன் 9 மாதங்களுக்குப் பின் பூமிக்குத் திரும்பினார். ஹீலியம் கசிவால் தாமதமானது. ஃப்ளோரிடா அருகே கடலில் விழுந்த விண்கலத்தை டால்பின்கள் வரவேற்றன.
நாசாவின் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தனது சக ஊழியர் புட்ச் வில்மோருடன் 9 மாதங்களுக்குப் பிறகு பத்திரமாக பூமிக்குத் திரும்பினார். கடலில் டால்பின்கள் சூழ்ந்து அவர்களுக்கு வரவேற்பு கொடுத்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்திய நேரப்படி மார்ச் 19 அன்று அதிகாலை 3:27 மணிக்கு ஃப்ளோரிடா கடற்கரை அருகே உள்ள கடலில் அவர்கள் விழுந்தனர். இதையடுத்து, விண்கலத்தில் இருந்த அனைத்து பயணிகளின் மீட்கப்பட்டு அவர்களுக்கு உடல்நலப் பரிசோதனை நடத்தப்பட்டது.
இரண்டு விண்வெளி வீரர்களும் ஜூன் 2024 முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தனர். அவர்களின் பயணம் 8 நாட்களுக்கு மட்டுமே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் விண்கலத்தில் ஹீலியம் கசிவு ஏற்பட்டதால் அவர்கள் ஒன்பது மாதங்கள் விண்வெளி நிலையத்தில் தங்க வேண்டியிருந்தது.
அவர்களை அழைத்துவர அனுப்பப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம், நேற்று அதிகாலையில் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டது. இந்திய நேரப்படி காலை 10:35 மணிக்கு விண்வெளி நிலையத்திலிருந்து இந்தப் பயணம் ஆரம்பமானது.
விண்வெளி வீரர்களை வரவேற்ற டால்பின்கள்
கடலில் வந்து விழுந்த விண்கலத்தை மீட்கும் பணி நடந்துகொண்டிருந்தபோது, பல டால்பின்கள் விண்கலத்தைச் சுற்றி நீந்திக்கொண்டிருந்தன. Crew-9 விண்வெளி வீரர்களுக்கு டால்பின்கள் வரவேற்பு கொடுப்பது போல இருந்த இந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
விண்கலம் விண்வெளி நிலையத்திலிருந்து பிரிந்து செல்வதைக் காட்டும் வீடியோவை நாசா பகிர்ந்திருந்தது. அதில் பயணிக்கும் Crew-9 குழுவை பூமிக்கு திருப்பி அனுப்பும் பொறுப்பு எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பணிக்காக ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் காப்ஸ்யூல் ஏவப்பட்டது.
விண்வெளிப் பயணம்
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் 5, 2024 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் பயணித்தனர். போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் அவர்கள் விண்வெளியை அடைந்தனர். எட்டு நாட்களுக்குப் பின் அவர்கள் திரும்ப இருந்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பச் சிக்கல் ஏற்பட்டது. இதனால், அவர்களை பூமிக்கு திருப்பும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பழுதான ஸ்டார்லைனர் விண்கலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆளில்லாமல் பூமிக்குத் திரும்பியது.
