டெல்டா வகை வைரசின் அதிவேகப் பரவலால், ஜூன் 21ம் தேதி அறிவிக்கப்பட இருந்த ஊரடங்கு தளர்வுகள் நீட்டிக்கப்பட உள்ளன

கடந்த ஜனவரி மாதம் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திய கோவிட் வைரசைக் காட்டிலும், டெல்டா வைரஸ் 60 சதவீதம் அதிகமாக பரவக்கூடியது' என, பிரிட்டிஷ் அரசு தெரிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதுகுறித்து பிரிட்டிஷ் அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’’இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கோவிட் வைரசின் டெல்டா மாறுபாடு, தற்போது ஐரோப்பா முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திய கோவிட் வைரசைக் காட்டிலும், டெல்டா வகை 60 சதவீதம் அதிகமாக பரவக்கூடியதாக இருக்கிறது. தென்கிழக்கு இங்கிலாந்தின் கென்ட் நகரில் அடையாளம் காணப்பட்ட ஆல்பா மாறுபாட்டுடன் ஒப்பிடும்போது, ​​டெல்டா சுமார் 60 சதவிகிதம் வீடு, சமூகப் பரவலுக்கான அபாயத்துடன் தொடர்புடையது' என, இங்கிலாந்தின் புதிய ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு அமைப்பின் தலைமை நிர்வாகி ஜென்னி ஹாரிஸ், 'நேற்றைய புதிய தொற்று 7,393 ஆக உயர்ந்துள்ளன. இது பிப்ரவரி மாதம் முதல் இல்லாத உச்சமாக உள்ளது. இந்த புதிய வழக்குகளில் 90 சதவீதம் டெல்டா வைரஸ் உட்பட்டவை தான். இதனால், வரும் 21ம் தேதி முதல் மீண்டும் கடுமையான ஊரடங்கை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது' என்றார்.

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், 'டெல்டா வகை வைரசின் அதிவேகப் பரவலால், ஜூன் 21ம் தேதி அறிவிக்கப்பட இருந்த ஊரடங்கு தளர்வுகள் நீட்டிக்கப்பட உள்ளன' எனத் தெரிவித்துள்ளார்.