ஜப்பானில் அடுத்தடுத்து 21 நிலநடுக்கங்கள்: வடகொரியா, ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை!
ஜப்பானை தொடர்ந்து வடகொரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
![Consecutive earthquakes in Japan Tsunami warning for North Korea and Russia smp Consecutive earthquakes in Japan Tsunami warning for North Korea and Russia smp](https://static-ai.asianetnews.com/images/01hk284rgmatg5q0g320zzkxwr/japan-tsunami_363x203xt.jpg)
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து அந்நாட்டை சுனாமி தாக்கி வரும் நிலையில், தற்போது வடகொரியா மற்றும் ரஷ்யாவின் கிழக்குப் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டின் ஹொன்ஷு தீவுகள் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டுள்ளது. அடுத்தடுத்து 7.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாலும் அவை கடலுக்கு அடியில் மையம் கொண்டிருந்ததாலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “ஜப்பானின் ஹொன்ஷுவின் மேற்குக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 5.5, 7.5, 6.2 ரிக்டர் என அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.” என ஐரோப்பிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அந்நாட்டுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்குக் கடலோரம் உள்ள அனைத்து ஜப்பானிய நகரங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தால் 5 முதல் 7 மீட்டர் அளவிலான சுனாமி அலைகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, கடலோர பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆரஞ்சு பழ ஜாம் செய்து அசத்திய ராகுல் காந்தி: தாய் சோனியாவுடன் நெகிழ்ச்சி சம்பவம்!
நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து, பாதுகாப்பு, மீட்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதனிடையே, ஜப்பானில் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஊருக்குள் கடல் நீர் வர தொடங்கியுள்ளது. மேற்கு ஜப்பானில் உள்ள காஷிவாசாகி-கரிவா அணுமின் நிலையத்திற்கு அருகில் 0.4 மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் தாக்கியதாக பதிவாகியுள்ளது.
சுனாமியின் முதல் அலைகள் ஜப்பானில் தாக்க தொடங்கியது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேபோல், ஜப்பனில் அடுத்தடுத்து 21 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இவை அனைத்துமே ரிட்டர் அளவுகோலில் 4.0 அதிகமானதாக பதிவாகியுள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கி வரும் நிலையில் தற்போது வடகொரியா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வடகொரியா மற்றும் ரஷ்யாவின் கிழக்குப் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் இந்த சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது
கடலுக்கு அடியில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளபோது டெக்டானிக் தகடுகள் ஒன்றோடு மோதாமல் ஒன்றின் மீது ஒன்றாக எழுந்தால் சுனாமி அலைகளின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் கூறியுள்ளனர். முன்னதாக, ஜப்பானில் 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையால் ஏற்பட்ட பேரழிவின் விளைவாக 18,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.