சீனாவில் பயங்கர நிலநடுக்கம்…. பலி எண்ணிக்கை 100க்கும் மேல் இருக்கும் என்பதால் சோகம்…..
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. குவாங்கியான் நகரில் இருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜியுஜாய்கோவ் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கடியில் 6 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.
அதே நேரத்தில் சிச்சுவான் மாகாணத்தில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கத்தில் 100 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளது.
சிச்சுவான் மாகாணத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து மீட்புப் படையினர் அப்பகுதியில் மீட்புப் பணிகளை செய்து வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த 2008ம் ஆண்டு சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 7 ஆயிரம்போ் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.