அமெரிக்‍க அதிபர் தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையாக போட்டி உள்ள நிலையில், ஹிலரி கிளிண்டனுக்‍கும், டொனால்டு டிரம்புக்‍கும் இடையிலான மக்‍கள் ஆதரவு பூஜ்ஜியம் புள்ளி 6 சதவீதம் அளவுக்‍கு மட்டுமே வேறுபடுவதால், இவர்களில் வெற்றிபெற போவது யார்? என உலகமே ஆவலோடு எதிர்நோக்‍கியுள்ளது. 

அமெரிக்‍க அதிபர் தேர்தல் வரும் 8-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், குடியரசுக்‍ கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், ஜனநாயகக்‍ கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் ஆகியோரிடையே, அமெரிக்‍க தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்‍கு இம்முறை பிரச்சார போர் நடைபெற்று வருகிறது. இருவரும் மாறிமாறி முன்னிலை வகிப்பதாக கருத்துகணிப்புகள் தெரிவிக்‍கின்றன.

இந்நிலையில், I.B.D. மற்றும் T.I.P.P. ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய கருத்துகணிப்பில், டிரம்ப்பை காட்டிலும் ஹிலரி கிளிண்டனுக்‍கு பூஜ்ஜியம் புள்ளி ஆறு சதவீதம் மட்டுமே கூடுதலாக மக்‍கள் ஆதரவு காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

ஹிலரி கிளிண்டனுக்‍கு 41 புள்ளி 8 சதவீத வாக்‍குகளும், டொனால்டு டிரம்புக்‍கு 41 புள்ளி 2 சதவீத வாக்‍குகளும் கிடைத்துள்ளதாக இந்த கருத்துகணிப்பு தெரிவிக்‍கிறது. இவ்விரு நிறுவனங்களும் கடந்த 2012-ம் ஆண்டு வெளியிட்ட கருத்துகணிப்பு துல்லியமாக இருந்தது என்பதால், தற்போதைய கருத்துகணிப்பும் சரியாக இருக்‍கும் என அமெரிக்‍க வாக்‍காளர்கள் கருதுகிறார்கள். மற்ற நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துகணிப்புகளும், ஹிலரி கிளிண்டனுக்‍கு மக்‍கள் ஆதரவு படிப்படியாக குறைந்து வருவதாக சுட்டிக்‍காட்டுகின்றன.

இதனிடையே, வடக்‍கு கரோலினா மாகாணம் Charlotte நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட டொனால்டு டிரம்ப், ஆஃப்ரிக்‍க அமெரிக்‍கர்களுக்‍கு கல்வி, வேலை வாய்ப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வாய்ப்பளிக்‍க வகை செய்யப்படும் என உறுதியளித்தார். 

இதனிடையே, Florida மாகாணத்தில் பிரச்சாரத்தை தள்ளி வைத்துவிட்டு, ஹிலரி கிளிண்டன் நேற்று தனது 69-வது பிறந்தநாளை கேக்‍ வெட்டி கொண்டாடினார்.