மலாவியின் துணை அதிபர் பயணித்த விமானம் மாயம்: தேடும் பணி தீவிரம்!
மலாவி நாட்டு துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா சென்ற ராணுவ விமானம் திடீரென மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
![Aircraft Carrying Malawi Vice President Saulos Chilima Missing smp Aircraft Carrying Malawi Vice President Saulos Chilima Missing smp](https://static-ai.asianetnews.com/images/01j02sbzxn0th1x0jhkgk4vgc5/malawi-vice-president-saulos-chilima_363x203xt.jpg)
தென் கிழக்கு ஆப்பிரிக்க நாடானா மலாவி நாட்டு துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா மற்றும் 9 பேரை ஏற்றிச் சென்ற ராணுவ விமான திடீரென மாயமாகியுள்ளது. அந்நாட்டு தலைநகர் லிலோங்வேயில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 9:17 மணிக்கு கிளம்பிய விமானம், Mzuzu சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்தது.
ஆனால், மோசமான வானிலை காரணமாக விமானியால் விமானத்தை தரையிறக்க முடியவில்லை. இதனால், விமானத்தை மீண்டும் லிலோங்வேவுக்கு திருப்ப அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே, விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ரேடாரில் இருந்து விலகிய விமானத்தை தொடர்பு கொள்ள அதிகாரிகள் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததாக அந்நாடு அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த அசோக் எல்லுசாமி? எலான் மஸ்க் எக்கச்செக்கமா பாராட்ட காரணம் என்ன?
முன்னாள் அமைச்சரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா மற்றும் 9 பேர் ராணுவ விமானத்தில் சென்றதாகவும் அந்த விமானத்தில் முன்னாள் முதல் பெண்மணி ஷனில் டிசிம்பிரியும் (Muluzi) இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாயமான விமானத்தை தேடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. விமானம் கண்டுபிடிக்கப்படும் வரை தேடும் நடவடிக்கையை தொடர மலாவி அதிபர் லாசரஸ் சக்வேரா உத்தரவிட்டுள்ளார். “இது ஒரு இதயத்தை உடைக்கும் சூழ்நிலை என்பதை நான் அறிவேன். ஆனால் அந்த விமானத்தை கண்டுபிடிப்பதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். கண்டுபிடிப்போம் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவுத்துறை அமைச்சர் உசைன் மற்றும் அந்நாட்டு மூத்த அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் அண்மையில் விபத்துக்குள்ளானது. அதில், சிக்கி இப்ராஹிம் ரைசி உள்பட அனைவருமே பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.