Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பை: பட்லரின் அதிரடியால் அசால்டாக வென்ற இங்கிலாந்து! நியூசிலாந்தின் தோல்வியால் ஆஸிக்கு செம்ம ஆப்பு

டி20 உலக கோப்பையில் இன்று நடந்த சூப்பர் 12 போட்டியில் நியூசிலாந்து அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தி உள்ளது இங்கிலாந்து அணி.

England beat New Zealand by 20 runs in T20 worldcup 2022 because of this match australia in trouble
Author
First Published Nov 1, 2022, 5:31 PM IST

உலக கோப்பை டி 20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் குரூப் 1-ல் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோர் அதிரடியாக துவக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்ந்தனர். அதிரடியாக ஆடிய அலெக்ஸ் ஹேல்ஸ் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஒரு புறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் நிலையாக நிலைத்து நின்று இறுதிவரை ஆடிய ஜாஸ் பட்லர் 73 ரன்கள் அடித்தார். இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை குவித்தது. நியூசிலாந்து பந்துவீச்சில் பெர்குசன் 2 விக்கெட்டுகளையும், சவுதி, சாண்ட்னர், இஷ் சோதி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற கடின இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு துவக்கமே மோசமாக அமைந்தது. துவக்க வீரர்கள் கான்வே 3 ரன்களுக்கும், ஃபின் ஆலன் 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்ததால், சரிவை சந்தித்த நியூசிலாந்து அணிக்கு வில்லியம்சன் - கிளென் பிலிப்ஸ் ஜோடி நம்பிக்கை அளித்தது. 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இருவரும் 91 ரன்கள் குவித்தனர்.

இதையும் படியுங்கள்...  டி20 உலக கோப்பை: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்! உத்தேச ஆடும் லெவன்

இவர்கள் இருவரும் நியூசிலாந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வில்லியம்சன் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்து நடையைக் கட்டியதால், இதன்பின் வந்த வீரர்கள் அதிரடியாக ஆட நினைத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 20 ஓவர்களில் நியூசிலாந்து அணியால் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணி இந்த போட்டியில் தோல்வியடைந்திருந்தாலும், அதிகமான ரன் ரேட் உள்ளதன் காரணமாக அந்த அணி அரையிறுதிக்கு செல்வது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. மறுபுறம் இங்கிலாந்து அணிக்கும், ஆஸ்திரேலியா அணிக்கும் அடுத்த வரும் போட்டிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் எஞ்சியுள்ள போட்டியில் இரு அணிகள் வெல்ல வேண்டும், அதிலும் குறிப்பாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... நியூசிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிகள் அறிவிப்பு.! டி20 கேப்டன் ஹர்திக் பாண்டியா

Follow Us:
Download App:
  • android
  • ios