எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் பதவி விலக வேண்டும் !! செல்போன் டவரில் ஏறி இளைஞர் போராட்டம் !!!
ஊழலில் ஊறி திளைத்து நிற்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அவர்களுக்கு துணை போகும் பாஜக அரசும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள செல்போன் டவரில் ஏறி இளைஞர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கடலூரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்… இவர் நீட் தேர்வு, ஜிஎஸ்டி மற்றும் தமிழக அரசுக்கு எதிராக தனி ஒருவராக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள செல் போன் டவரில் 100 அடி உயரத்துக்கு ஏறிய ரவிச்சந்திரன், ஊழல் ஆட்சி புரிந்து வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் இல்லை என்றால் அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார்.
அனிதாவின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்றும், நீட் தேர்வுக்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்து அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை ஆகியோரும் பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் அங்கு வந்து ரவிச்சந்திரனிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அவரை டவரில் இருந்து கீழே இறக்கி விட்டனர். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.