வீட்டில் தூக்கில் தொங்கிய இளம்பெண்; இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் - காவலாளர்கள் விசாரணை...
தருமபுரி
தருமபுரியில் திருமணமாகி ஏழு மாதங்களே ஆன நிலையில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். உறவினர்கள் இறப்பில் சந்தேகம் இருக்கிறது என்று புஅகர் அளித்ததால் காவலாளர்கள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள கெஜல்நாயக்கனஅள்ளியைச் சேர்ந்தவர் முருகன் (22). இவருடைய மனைவி மதுமிதா (19). இவர்களுக்கு கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு மதுமிதா கெஜல்நாயக்கனஅள்ளியில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வந்தார். முருகன் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததால் வாரத்திற்கு ஒருமுறைதான் சொந்த ஊருக்கு வருவாராம்.
இந்த நிலையில், மதுமிதாவை, கணவன் முருகன் தருமபுரியில் இயங்கிவரும் தனியார் கல்லூரியில் பி.காம். படிக்க சேர்த்துவிட்டுள்ளார்.
மதுமிதாவும் கல்லூரிக்குச் சென்றுவந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டதாம். பொங்கல் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த முருகனுக்கும், மதுமிதாவிற்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மதுமிதா வீட்டில் உள்ள அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து காரிமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
அதன்பேரில் காவல் ஆய்வாளர் சதீஸ்குமார் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மதுமிதாவின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மதுமிதா குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? போன்ற பல்வேறு கோணத்தில் காவலாளர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மதுமிதா சாவில் மர்மம் இருப்பதாக அவருடைய உறவினர்கள் தரப்பில் புகார் தெரிவித்துள்ளனர் என்பதும், திருமணமாகி ஏழு மாதங்களே ஆன நிலையில் மதுமிதா தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக தர்மபுரி உதவி ஆட்சியர் ராமமூர்த்தி விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.